Revolver Rita Day 2 Box Office - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா 2வது நாள் வசூல்.. விஜய் மேனேஜருக்கு அடி
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் ஓரளவுக்கு ஹைப்போடு நேற்று முன்தினம் வெளியானது. ஆனால் படம் மோசமான விமர்சனங்களை பெற்றுவிட்டது. டார்க் காமெடி என்கிற பெயரில் எதையோ எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ்; ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக தேடி நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த ரகுதாத்தா படம் தோல்வியை சந்தித்திருந்தது. அதனையடுத்து ஜே.கே. சந்துரு இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் உருவாக்கப்பட்ட ரிவால்வர் ரீட்டா படத்தில் இப்போது நடித்திருக்கிறார். இதில் அவருடன் ராதிகா, ஜான் விஜய், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்.
ரிலீஸான படம்: படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் கோலமாவு கோகிலா வாடை அடித்தது. ஆனால் இது வேறு மாதிரியான படம் என்று ப்ரோமோஷனில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கூறினார்கள். எனவே ஏதேனும் வித்தியாசமாக ட்ரை செய்திருப்பார்கள் என்ற ஹைப்பும் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் நேற்று முன்தினம் படமானது திரையரங்குகளில் வெளியானது.

படம் மோசம்: அந்த ஹைப்போடு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். ஆனால் கதை, திரைக்கதை, மேக்கிங் என எதுவுமே தேறவில்லை. டார்க் காமெடி என்று சொன்னார்கள் சரி; இதில் காமெடி எங்கே இருக்கிறது என்று கழுவி கழுவி ஊற்றினார்கள் ரசிகர்கள். இப்படிப்பட்ட படத்துக்கு ஏன் ப்ரோமோஷனில் அவ்வளவு ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
கீர்த்தி, ராதிகா பலம்: படம் அப்படி இப்படி இருந்தாலும் கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் படத்தை தங்களது தோள்களில் தாங்கியிருந்தார்கள். தான் ஒரு தேசிய விருது வென்ற நடிகை என்பதை இப்படத்தில் மீண்டும் நிரூபித்திருந்தார் கீர்த்தி. அவர்கள் இரண்டு பேர் மட்டும் இல்லையென்றால் சில நிமிடங்கள்கூட தியேட்டரில் அமர்ந்திருக்க முடியாது. அந்த அளவு கர்ண கொடூரமாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் என்று அடித்து துவைத்து வருகிறார்கள். எனவே படக்குழு கொஞ்சம் அப்செட்தான்.
வசூல் நிலவரம்: இந்நிலையில் ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் நிலவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் வெறும் 75 லட்சம் ரூபாயை (தமிழில் 55 லட்சம், தெலுங்கில் 20 லட்சம்) வசூலித்த படமானது; இரட்னாவது நாளான நேற்றும் 75 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்து; மொத்தம் 1.50 கோடி ரூபாயைத்தான் வசூலித்திருக்கிறதாம். இதனால் படத்தை தயாரித்த விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு சரியான அடி விழுந்திருப்பதாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











