ஜெயம் ரவியுடன் உறவு இருக்குதான்.. விவாகரத்துக்கு நான் காரணமா?.. போட்டுடைத்த கெனிஷா
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி டாபிக் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியது. இருவரும் மனம் ஒத்து பிரிந்துவிட்டார்கள் என்று நினைத்த சூழலில் திடீர் ட்விஸ்ட்டாக ஆர்த்தி மீது காவல் துறையில் புகார் அளித்தார் ஜெயம் ரவி. சூழல் இப்படி இருக்க ரவியுடன் தொடர்புப்படுத்தி பேசப்படும் கெனிஷா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையையும் கவனமாக கையாளும் ரவி கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அவரது கைகளில் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக இந்த மூன்று படங்களுமே ஹிட்டடிக்கும் என்ற பெருத்த நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயம் ரவி. முக்கியமாக பிரதர் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

மனைவியை பிரிந்த ரவி: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரவி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எனது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன். திருமண வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன்' என்று கூறியிருந்தார். மேலும் விவாகரத்து மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. மேலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால்தான் விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாக பலரும் பேசினார்கள். இருந்தாலும் ஜெயம் ரவி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
ரவியின் விளக்கம்: ஜெயம் ரவியுடன் கெனிஷா என்ற பெண் தொடர்புப்படுத்தி பேசப்பட்டார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, 'இந்த விஷயத்தில் அந்தப் பெண்ணை (கெனிஷா) இழுப்பது தேவையற்ற ஒன்று. அவர் பலருக்கு உதவிகள் செய்துவருகிறார். ஆதரவற்ற பெண் அவர். அதேபோல் நானும் அவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் மையத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறோம்' என்று தெரிவித்திருந்தார். ரவியின் இந்த விளக்கத்துக்கு பிறகு கெனிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார்.
கெனிஷா பேட்டி: இந்நிலையில் கெனிஷா பிரான்சிஸ் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் உறவு உண்மைதான். ஆனால் அந்து நட்பு ரீதியானதாகவும், தொழில்முறையாகவும் இருக்கிறது. அவர் எனது வாடிக்கையாளர் அவ்வளவுதான். அவர்களது விவாகரத்துக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது முழுக்க முழுக்க பொய் என்பதை இங்கே நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.
குடும்ப பிரச்னை: இது உங்கள் வீட்டு பிரச்னை இல்லை. இது வேறு ஒருவரது குடும்ப பிரச்னை. அதிலிருந்து விலகியே இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். அதற்கு நேரம் இல்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆர்த்திக்கு ரவி நோட்டீஸ் அனுப்பும்வரைக்குமே இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது" என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். கெனிஷா ஒரு ஹீலிங் தெரப்பிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆர்த்தியிடமிருக்கும் தன்னுடைய கார், பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகளை மீட்டு தருமாறு ஜெயம் ரவி காவல் துறையிடம் புகார் அளித்திருப்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











