மொத்தம் 2 பேர்..இருக்கும்வரை என்ஜாய் செய்வேன்.. யாருக்கும் தரமாட்டேன்.. மனம் திறந்த கெனிஷா
சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார். ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த அவர்; தனக்கும் கெனிஷாவுக்கும் எந்த உறவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்திருந்தார். அதனையடுத்து ஆர்த்தியும் காட்டமாகவும், எமோஷனலாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கெனிஷா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு கோலிவுட்டில் தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது அவர் ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். ஜீனி திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தியுடன் பிரிவு: இதற்கிடையே அவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ஆர்த்தியும், ரவியும் சுமூகமாகத்தான் தங்களது வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்கள். அப்படிப்பட்ட நிலைமையில் தன்னுடைய மாமியாரின் தயாரிப்பில் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் ரவி. அந்தப் படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. மேலும் கொஞ்சம் நஷ்டத்தை தந்ததாகவும் கூறப்பட்டது. நிலைமை இப்படி இருக்க ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார் ரவி.

இதுதான் காரணமா?: ஆர்த்தியை ரவி பிரிந்ததற்கு பலரும் பல காரணங்களை சொன்னார்கள். அதில் முக்கியமான ஒன்று என்றால், ரவியை ஆர்த்தியும், அவரது தாயாரும் அளவுக்கு மீறி கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான். ரவியும் பின்நாட்களில் தான் கொடுத்த பேட்டிகளில் அதை உறுதிசெய்துகொண்டே வந்தார். இது தவிர்த்து அவருக்கும் கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும்; அந்தத் தொடர்புதான் ரவி -ஆர்த்தி பிரிவுக்கு மிக மிக முக்கியமான காரணம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.ஆனால் கெனிஷாவுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது கூறினார் ரவி.
ஜோடியாக வந்த ரவி: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ஜோடியாக வந்தார் ரவி. ஒரே நிறத்திலான உடை, கெனிஷாவின் கைகளை பற்றியபடி நடந்து சென்றது என பரபரப்பை கூட்டினார். மேலும் கெனிஷாவுடன் காதலில் இருப்பதை அவர் உறுதி செய்துவிட்டார் என்று சத்தமாகவே குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அதேசமயம் ஆர்த்தியோ தன்னை யாரும் ரவியின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அவருக்கு ராதிகா, குஷ்பூ போன்றோர் தங்கலது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
கெனிஷாவின் பேட்டி: இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலைமையில் கெனிஷா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நான் எனது சோல் மேட்டை கண்டுவிட்டேன். எனக்கு மொத்தம் இரண்டு சோல் மேட்ஸ் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெண். எங்கள் இரண்டு பேருக்கும் அவ்வளவு புரிதல்கள் இருக்கின்றன. அவர் என்ன செய்தாலும் நானும், நான் என்ன செய்தாலும் அவரும் பொறுத்துக்கொள்வோம்.
யாருக்கும் தரமாட்டேன்: இன்னொரு சோல் மேட் என்னுடைய கண்களை திறந்திருக்கிறார். பாதுகாப்பு, அக்கறை என அத்தனையுடனும் இருக்கிறார்.கஷ்டப்படுத்தாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறார். நான் கொஞ்சம் குழந்தைத்தனமான கேரக்டர்தான். எப்போ நான் இறப்பேன் என்று எனக்கே தெரியாது. எனவே இருக்கும்வரைக்கும் என்ஜாய் செய்ய வேண்டும். நான் யாருக்கும் கெடுதல் செய்யமாட்டேன். என்னைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவது என்னுடைய பிரச்னை இல்லை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இல்லை. எனவே அதனை என் மேல் போடுகிறீர்கள். நம்முடைய மென்ட்டல் ஹெல்த்தை நாம்தான் பார்க்க வேண்டும். அடுத்தவரிடம் கொடுத்தால் நாஸ்தி ஆகிவிடும். நான் அதனை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











