தமிழ் ராக்கர்ஸ் டீம் கைது.. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.. வேட்டையன் கிட்ட மோதினா இதுதான் கதி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ள படம் வேட்டையன். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது. இந்நிலையில் படங்களை ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் டீமில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வேட்டையன் படத்தின் பிரதி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சினிமா உலகிற்கே மிகவும் தொல்லை தரக்கூடிய மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக இருப்பது படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதுதான். தொடக்க காலத்தில் அவை திருட்டு விசிடி, திருட்டு டிவிடிகளாக இருந்தது. தற்போது இணையம் வளர்ந்துவிட்டதால், படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இதனால் இணையவாசிகள் பலரும் படத்தினை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர். இவர்கள் மட்டும் இல்லாமல் தங்களது சுற்று வட்டத்தினருக்கும் பகிர்கின்றனர். இதனால் படத்தின் வசூல் பெருமளவு பாதிப்பினைச் சந்திக்கின்றது.

இணையத்தில் படங்களைப் பார்க்கும் மக்களிடம் இருந்து திரை உலகிற்கு வருமானத்தை ஈட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓடிடி தளங்கள் மூலம் திரைத்துறைக்கு வருமானம் கிடைத்தாலும், அங்கிருந்தும் படத்தினை பதிவிறக்கம் செய்து இணையத்தில் பரப்புகின்றது. இதற்காக டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அதிக குழுக்கள் செயல்படுகின்றது. அரசு என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் இதற்கு நிரந்தர தீர்வு என்பதை எட்டமுடியவில்லை என்றே கூறவேண்டும்.

தமிழ் ராக்கர்ஸ்: இப்படியான நிலையில், மலையாள நடிகர் டெவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயந்தே இரண்டாம் மோஷனம் படத்தினை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்த வழக்கில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இரண்டு பேரை, கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் இருவரைக் கைது செய்தனர். தமிழ்நாட்டினைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.

வேட்டையன்: இந்தக் கைதின்போது அவர்களிடத்தில் வேட்டையன் படத்தின் பைரசி காப்பியும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், இதனை கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் பதிவு செய்ததாகவும், தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ் ராக்கர்ஸைச் சேர்ந்தவர்கள் என்பதையும் சைபர் க்ரைம் போலீசார் உறுதி செய்துள்ளனர். இவர்களிடத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தத் தகவல் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வசூல்: வேட்டையன் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. இது இல்லாமல் அண்டை மாநிலங்கள் வட மாநிலங்கள், வெளிநாடுகள் என மொத்த தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 25 கோடிகளில் இருந்து 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல் முதல் நாளில் படம் ரூபாய் 35 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுவரை படம் ரூபாய் 50 கோடிகள் முதல் 60 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இன்றும் நாளையும் என வார இறுதி நாட்கள் இருப்பதால் வேட்டையன் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்தும் என படக்குழு நம்புகின்றது. மேலும் படக்குழு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











