2000 கோடி இல்ல.. வசூல் 3000 கோடி ப்பே.. கங்குவாவை கண்டமாக்கும் ரசிகர்கள்.. சூர்யா ரொம்ப பாவம்தான்
சென்னை: கங்குவா படம் இன்று ரிலீஸாகி அனைத்து திசைகளிலும் மோசமான விமர்சனங்களையே சந்தித்துவருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில ரசிகர்களும் படத்தை கழுவி ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி படம் டிஸாஸ்டர் ஆனதற்கு காரணமே சூர்யா மற்றும் ஞானவேலுவின் ஓவர் பேச்சுதான் என்று சமூக வலைதளங்களில் பதிவுகளை பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில் கங்குவாவை பார்த்த கேரள ரசிகர்கள் சிலர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படங்களில் ஒன்று கங்குவா. சிவா இயக்கி சூர்யா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே அண்ணாத்த படத்தின் மெமரிஸ் ரசிகர்களில் வந்து போனது. இருந்தாலும் முதன்முறையாக சூர்யாவை சிவா இயக்குவதால் கண்டிப்பாக இந்தப் படத்தை அவ்வளவு மோசமாக கொடுத்துவிடமாட்டார் என்றே சூர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் அவரது கரியரிலேயே அதிக பட்ஜெட் படமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓவர் ஹைப்: இது ஒருபக்கம் இருக்க படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பித்ததிலிருந்து வந்தது வில்லங்கம். ஞானவேல் கொடுத்த ஒரு பேட்டியில், "கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டால்; இதன் இரண்டாம் பாகத்துக்கு யாருமே போட்டியாக படத்தை இறக்கமாட்டார்கள்" என்று கூறியிருந்தார். அதனையடுத்து இன்னொரு பேட்டியில், 'நிச்சயம் இந்தப் படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும். அதற்கான ஆதாரத்தை எக்ஸ் தளத்தில் பகிர்வேன்' என்று சொல்லியும் ஷாக் கொடுத்தார்.
சூர்யாவின் ஹைப்: ஞானவேல் மேற்சொன்னபடி பேசியபோதே ரசிகர்கள் கொஞ்சம் எச்சரிக்க ஆரம்பித்தார்கள். நிலைமை இப்படி இருக்க ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய சூர்யா, 'கங்குவா படத்தை பார்க்கும்போது அனைவருமே வாயை பிளந்து பார்ப்பார்கள். இப்படி ஒரு சினிமாவை தமிழ் திரைத்துறையில் எடுக்க முடியுமா என்று இந்திய திரைத்துறையே ஆச்சரியப்படும்' என்று கூறினார். இதனை கவனித்த ரசிகர்கள், என்ன லைட்டா அஞ்சான் வாடை அடிக்கிறது என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள்.
படுமோசம் கங்குவா: இப்படி சூர்யாவும், ஞானவேலுவும் எக்கச்சக்க ஹைப்பை ஏற்றிவிட; அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக இன்று ரிலீஸான கங்குவாவுக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அப்செட். இதில் ஒன்றுமே இல்லையே; இதை நம்பி எப்படி 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று ஞானவேலுவும்; அனைவரும் வாயை பிளப்பார்கள் என்று சூர்யாவும் பேசினார்கள் என்று ஓபனாக கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் கங்குவா முதல் நாளிலேயே புஸ்வானம் ஆகிவிட்டது.
கேரள ரசிகர்கள்: தமிழ்நாட்டு ரசிகர்கள்தான் இப்படி என்றால் கேரள ரசிகர்கள் கங்குவாவை கண்டமாக்கிவருகின்றனர். திரையரங்கு ஒன்றில் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களில் ஒருவர், "அய்யோ இரண்டரை மணி நேரம் நொந்துவிட்டேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். அதேபோல் இன்னொரு ரசிகர், 'சூர்யாவை வைத்து சிவா செய்துவிட்டார். படத்தில் ஒன்றுமே இல்லை' என்று கூறினார். அதற்கு அடுத்து வந்த ரசிகரோ, இந்தப் படம் கண்டிப்பாக 3,000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று கொளுத்திப்போட, அவருக்கு பின்னால் வந்தவரோ, '3,000 கோடி ரூபாய் எல்லாம் இல்லை 3001 கோடி ரூபாயை கண்டிப்பாக வசூலிக்கும் என கிண்டல் செய்துவிட்டு போனார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், 'அய்யோ சூர்யா நிலைமை ரொம்ப மோசமா போகுதே' என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











