மரண வீட்டிலும் வியூஸ் வெறி.. அத்துமீறும் யூடியூபர்களுக்கு 2 ஆண்டு ஜெயில்.. போலீஸ் அதிரடி எச்சரிக்கை!
சென்னை: ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இன்டர்நெட் கையில் கிடைத்த பிறகு இன்று உலகமே மாறிவிட்டது. தெருவில் ஒரு சண்டை நடந்தால் கூட, அதைத் தீர்த்து வைக்காமல் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் 'வியூஸ்' அள்ளும் நெட்டிசன்களையே நாம் அதிகம் பார்க்க முடிகிறது. இந்த 'வியூஸ்' மோகம் தற்போது எல்லை மீறி, மரண வீடுகளிலும் அத்துமீறலாக மாறி வருவது வேதனையாக உள்ளது.
அரசியல் பிரமுகர்களோ அல்லது சினிமா பிரபலங்களோ யாராவது இறந்துவிட்டால், அவர்களது வீட்டு வாசலில் கேமராவையும் ஃபோனையும் தூக்கிக் கொண்டு நூற்றுக்கணக்கான யூடியூபர்களும், ஊடகங்களும் குவிந்து விடுகின்றனர். அங்கு அஞ்சலி செலுத்த வரும் மற்ற பிரபலங்களை வழிமறித்து, அவர்களது சோகத்தை கூட மதிக்காமல், இறந்தவரைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லுங்க என்று மைக்கை நீட்டி நச்சரிப்பது சமீபகாலமாகப் பெருகிறது வருகிறது.
நடிகர் சலீம் குமார் மரணம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார் உடல்நலக் குறைவால் காலமானார். ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு, திடீரென ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாகக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜூன் 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் சலீம் குமாரின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் வழக்கம்போல ஏராளமான யூடியூபர்களும், மீடியாக்களும் கேமராக்களுடன் குவிந்தனர். இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இதனால் கடும் இடையூறு ஏற்பட்டது.

மலையாள நடிகர்: ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சலீம் குமாரின் மகன், அங்கிருந்த ஊடகங்களையும் யூடியூபர்களையும் வெளியேற சொன்னார். இதையடுத்து உடனடியாக போலீசாரை வரவழைத்து அத்துமீறிய கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றினார்.' இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலக் காவல்துறை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிரபலங்கள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், துக்க நிகழ்வுகளிலும் அத்துமீறி நுழையும் யூடியூபர்கள் மற்றும் ஊடகத்தினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின்படி இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழியுள்ளது எனக் கேரளா போலீஸ் அதிரடியாக எச்சரித்துள்ளது.
தமிழகத்திலும் சட்டம் வரணும்: கேரளாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலும் கூட அண்மைய காலங்களாகப் பிரபலங்களின் இறுதிச்சடங்குகளில் நெரிசலை ஏற்படுத்துவதும், அஞ்சலி செலுத்த வருபவர்களைத் துரத்தித் துரத்திப் பேட்டி எடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்கும் வகையில், தமிழக அரசும் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு எதிராக முறையான வழிகாட்டுதல்களையும், கடுமையான விதிகளையும் கொண்டு வர வேண்டும் என்பதே தற்போதைய சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications