சன்னி லியோனுடன் குத்தாட்டம்! ப்ளான் போட்ட காலேஜ் பசங்க! நிகழ்ச்சியை ரத்து செய்த கேரளா யுனிவர்சிட்டி!
திருவனந்தபுரம்: நடிகை சன்னி லியோனைத் தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. தனது இளம் வயதில் நீலப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் ஒரு கட்டத்திற்கு மேல் அதிலிருந்து வெளியேறினார். தற்போது இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களில் நடித்து வருகின்றார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய பொறியியல் கல்லூரியில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு கல்லூரியில் உள்ள மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி அமையுமாறு ஏற்பாடு செய்திருந்தனர் மாணவர்கள். சன்னி லியோன் வருவது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாத வண்ணமும் மாணவர்கள் ப்ளான் போட்டுள்ளனர்.

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை: இந்த விவரத்தை கேள்விப்பட்ட கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். மோகனன் குன்னும்மாள், நிகழ்ச்சியைத் தடைசெய்து, பல்கலைக்கழகம் நடிகை சன்னி லியோனின் நிகழ்ச்சியை நிரல் பட்டியலில் சேர்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்த பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். கல்லூரி வளாகத்தினுள் அல்லது வெளியில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கு மாண்வர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் துணைவேந்தர் டாக்டர். மோகனன் குன்னும்மாள்வலியுறுத்தியுள்ளார். கல்லூரி யூனியன் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல்கலைக்கழக அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறத் தவறிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

துயரச் சம்பவம்: கடந்த ஆண்டு கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து, கல்லூரி வளாகங்களில் வெளியில் இருந்து சினிமா பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது, டிஜே பார்ட்டிகள் நடத்துவது, இசை கச்சேரிகள் நடத்துவது போன்றவற்றுக்கு மாநில அரசு தடை விதித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் துணைவேந்தர் டாக்டர். மோகனன் குன்னும்மாள் தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டங்களுக்கு தடை: கடந்த ஆண்டு, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்தனர் . கல்லூரி வளாகத்தில் உள்ள உள்அரங்கத்தில் நிகிதா காந்தி தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு பின்னரே கல்லூரி வளாகங்களில் பிரபலங்களை அழைத்துவந்து நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
4 பேர் மரணம்: இந்த நிகழ்வின் போது கூட, வளாகத்திற்குள் அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் மழை பெய்யத் தொடங்கியபோது நிலைமை மாறியது. இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருந்த மாணவர்களும் ஆடிட்டோரியத்திற்குள் வந்ததால், நெரிசல் ஏற்பட்டது. இந்த கடும் நெரிசலால் சில மாணவர்கள் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆண்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட துயரச் சம்பவத்தைப் போல் இனி ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











