ஹேமா கமிஷன் அறிக்கை வெளிப்படுத்தத் தேவையில்லை... கேரள மகளிர் ஆணையம் உறுதி
கொச்சி : கடந்த 2017ல் மலையாளத் திரையுலகில் நடிகை ஒருவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலையடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதையடுத்து ஹேமா கமிட்டி தனது அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பித்தது.
கேரளாவில் டபள்யூ.சி.சி என்ற அமைப்பின் மூலம் ஒன்றிணைந்த நடிகைகள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரில் சந்தித்து புகார் மற்றும் கோரிக்கைகளை அளித்த நிலையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

நடிகை கடத்தல் விவகாரம்
கடந்த 2017ல் காரில் கொச்சி நோக்கி சென்ற பிரபல நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு அதுகுறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை கேரள திரையுலகில் ஏற்படுத்தியிருந்தது.

டபள்யூ.சி.சி அமைப்பு துவக்கம்
இதையடுத்து டபள்யூ.சி.சி என்ற அமைப்பு துவங்கப்பட்டு, கேரள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் அவலங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து நடிகைகள் புகார் அளித்தனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமைப்பு உருவாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீதிபதி ஹேமா விசாரணை குழு அமைப்பு
இந்த விவகாரத்தில் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு கடந்த 2019ல் அது தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இது சம்பந்தமாக ஏராளமான நடிகைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மலையாள திரையுலகில் வாய்ப்பிற்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நிலை உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாணையம் அமைக்க கோரிக்கை
இதை கண்காணிக்கும் வகையில் ஒரு தீர்ப்பாணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த அறிக்கையில் வெளிப்படுத்த முடியாது என்று கேரள மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையை வெளிப்படுத்த தேவையில்லை
இந்த அறிக்கையில் பலரும் தங்களது சொந்த அனுபவங்களை கூறியுள்ள நிலையில், அதை வெளிப்படுத்த தேவையில்லை என்று கேரள மகளிர் ஆணைய தலைவி பி சத்திதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டபள்யூ.சி.சி உறுப்பினர்கள் சந்திப்பு
நேற்றைய தினம் டபள்யூசிசி உறுப்பினர்கள் அஞ்சலி மேனன், பார்வதி, பத்மபிரியா உள்ளிட்ட 5 பேர் இணைந்து கேரள மகளிர் ஆணையத் தலைவர் சத்திதேவியை நேரில் சந்தித்தனர். இதையடுத்தே இதுகுறித்து தற்போது சத்திதேவி தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையின் பரிந்துரையின்பேரில் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டபள்யூ.சி.சி. பரிந்துரைகள்
டபள்யூசிசி உறுப்பினர்கள் முன்னதாக கேரள சினிமாவில் தயாரிப்பு நிறுவனமே நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை கேரள முதலமைச்சர் மற்றும் மகளிர் ஆணையத்திடம் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











