கெட்டவன் படத்தை நாசமாக்கிட்டார்.. சிம்புவால் நடுத்தெருவுல இருக்கேன்.. கொந்தளித்த இயக்குநர்!
சென்னை: நந்தவனம் நந்தகுமார் இயக்கத்தில் நடிகர் சிம்பு 'கெட்டவன்' படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படம் பாதியில் நின்றுவிட்டது. அந்த படம் எப்போது வரும், அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா? என்று இப்போதும் கூட ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இயக்குநருக்கும் சிம்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படம் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த படத்தின் வசனத்தை சிம்பு வேறு ஒரு படத்தில் பயன்படுத்தி கெட்டவன் படத்தையே நாசமாக்கி விட்டார் என ஆதங்கத்துடன் கொந்தளித்துள்ளார்.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நந்தவனம் நந்தகுமார், கெட்டவன் படம் டிராப்பான பிறகும், சிம்புவிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. அப்போது, எனக்கு பண பிரச்சனை இருந்தது. அந்த நேரத்தில் சிம்பு எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார். அது மருத்துவ செலவுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. இது குறித்து பல பேட்டிகளில் நான் சிம்பு எனக்கு உதவி செய்தார் என்று பெருமையாக சொல்லி இருக்கிறேன்.

நாசமாக்கிவிட்டார்: அதன் பிறகு, ஒரு வாரம் கழித்து சிம்பு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது கெட்டவன் படத்தின் கடைசி கிளைமாக்ஸ் வரும் வசனத்தை கூறும்படி கேட்டார். நான் எதற்கு என்று கேட்டேன். அப்போது அவர், AAA நானும் ஜிவியும் பேசுவது போல ஒரு காட்சி வருகிறது. அந்த இடத்தில் அந்த வசனத்தை வைத்தால் நன்றாக இருக்கும். அதற்காக என்னிடம் கேட்டார். நானும் எனக்கு உதவி எல்லாம் செய்து இருக்கிறார் என்பதற்காக அந்த வசனத்தை அவரிடம் கூறினேன்.
ஆனால், அந்த வசனம் கெட்டவன் படத்திற்குத்தான் சரியானதாக இருக்கும், அந்த படத்தின் முழு சாராம்சமும் அந்த வசனத்தில் தான் இருக்கிறது என்று சொன்னேன். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், AAA படத்தில் அந்த வசனத்தை வைத்து, அந்த வசனத்தையே நாசமாக்கி விட்டார். கெட்டவன் படத்தின் கதையை திருடி மொத்தமாக படமாக எடுத்து இருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனால், சிம்பு எனக்கு உதவி செய்வது போல வந்து, நான் தேடி சேகரித்து வைத்த வசனத்தை தூக்கி சென்றுவிட்டார் என்று இயக்குநர் ஆதங்கத்துடன் பேசினார்.


Click it and Unblock the Notifications











