'இன்றைய ஹீரோக்களுக்கு ரயில், விமான டிக்கெட் கூட எடுக்கத் தெரியாது; சம்பளத்தை ஏத்த மட்டும் தெரியும்!!
சென்னை: இன்றைய ஹீரோக்கள் பலருக்கு விமான டிக்கெட், ரயில் டிக்கெட் கூட எடுக்கத் தெரியாது. ஆனா சம்பளத்தை மட்டும் வித விதமா ஏத்தத் தெரிஞ்சி வச்சிருக்காங்க," என்று விளாசினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
சிநேகாவின் காதலர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "இன்றைய ஹீரோக்களுக்கு உலக நடப்புன்னா என்னான்னு தெரியறதில்ல.

ஹீரோ கதை கேட்ட லட்சணம்
சமீபத்துல ஒரு பெரிய ஹீரோவிடம் இயக்குனர் ஒருவர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்டு மிரண்டு போன அந்த ஹீரோ, 'கதை சூப்பரா இருக்கு. தயாரிப்பாளரை கொண்டு வாங்க... நாம சேர்ந்து பண்ணலாம்னு,'ன்னு சொல்லியிருக்கிறார்.
அந்த இயக்குனர் என்னிடம் வந்து அந்த கதை ஏற்கெனவே வெளிவந்து படு தோல்வியடைந்த ஒரு படத்தின் கதை.. இதுகூட அந்த ஹீரோவுக்கு தெரியல,-ன்னு புலம்பினார். ஹீரோக்களுக்கு எந்த மாதிரி கதைகள் வருகின்றன. எந்த மாதிரி படங்கள் வருகின்றன என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

டிக்கெட் எடுக்கக் கூட தெரியாத ஹீரோக்கள்
இவங்களுக்கு வெளி உலகமே தெரியறதில்ல. விமான டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும். ரயில் டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியாது. ஆனால் சம்பளத்தை விதவிதமா எப்படி உயர்த்த வேண்டும்... எப்படி வாங்க வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

சினிமா ஒரு மேஜிக்
ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அந்த படத்தின் ஹீரோ அடுத்த படத்துக்கு சம்பளத்தை ஏத்திடறார். ஆனால் இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்காது. இதுதான் இன்றைய நிலை.
சினிமா ஒரு மேஜிக் மாதிரி. வெற்றி தோல்வி வரும் போகும். சினிமாக்காரர்களுக்கு அதைவிட்டால் வேறு வேலை தெரியாது. சினிமா மட்டும் ரிட்டையர்மெண்ட் இல்லாத தொழில்.

தயாரிப்பாளர் சங்கத்தைக் குறை சொன்னா எப்படி?
இன்னொன்னு தொலைக்காட்சி உரிமம் வாங்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் பலர் படம் எடுக்க கிளம்பியுள்ளனர். இப்படி தொலைக்காட்சிகளின் கண்டு கொள்ளாததால் மட்டும் 750 படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதற்கெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தை குறை சொன்னால் எப்படி? நல்ல கதையை நம்பி படமெடுக்கணும், சரியான சூழலில் விற்கத் தெரியணும். இந்த அடிப்படை கூடத் தெரியாமல் படமெடுக்க வந்துவிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது தப்பில்லையா?," என்றார்.

கங்காரு தயாரிப்பாளருக்கு பதிலடி
சமீபத்தில் கங்காரு படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பவர், "சின்ன படங்கள் வெளியாகவும், தொலைக்காட்சி உரிமையை விற்கவும் தயாரிப்பாளர் சங்கம் உதவவில்லை. எனவே அந்த சங்கத்தை இழுத்து மூடுங்க' என்று பேசியிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் தொடர்ந்து கேயார் இவ்வாறு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











