உங்களை முதன்முறையாக பார்த்த தருணம்.. சுந்தர்.சியை நினைத்து நெகிழும் குஷ்பூ
சென்னை: மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுந்தர்.சி. பிறகு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காமெடி ஜானரில் படம் இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பெற்ற அவர் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, சுந்தர்.சி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. சூழல் இப்படி இருக்க அவர் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர். அவர் முதலில் இயக்கிய படம் முறைமாமன். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றுவரை ரசிக்கக்கூடியவை. அடுத்ததாக அவர் இயக்கிய உள்ளைத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி உள்ளிட்ட படங்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருப்பவை.
காமெடி ஜானரில் கிங்: சுந்தர்.சி படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவர் இயக்கிய வின்னர் படம் எல்லாம் காலத்துக்கும் தனித்து நிற்பவை. இடையில் சில காலம் இயக்கத்தை நிறுத்தி நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பினார். அப்படி அவர் இயக்கிய கலகலப்பு, அரண்மனை சீரிஸ் படங்கள் எல்லாம் மெகா ஹிட்டாகின.

கேங்கர்ஸ்: அவரது இயக்கத்தில் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்துக்கு முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான மதகஜராஜா, அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்தன. எனவே சுந்தருக்கு கேங்கர்ஸ் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வழக்கமான சுந்தர்.சியின் டெம்ப்ளேட்டில்தான் படம் அமைந்திருந்தது. இருப்பினும் முந்தையை இரண்டு படங்களை ஒப்பிடுகையில் கேங்கர்ஸ் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.
30 வருடங்கள் நிறைவு: சூழல் இப்படி இருக்க அவர் இயக்குநராக அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில் அதுகுறித்து அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் அன்பே. 30 வருடங்களாக உங்களது அசைக்க முடியாத ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடுகிறேன். உங்களை முதலில் சந்தித்த தருணத்திலிருந்தே உங்களிடம் ஒரு தீப்பொறி இருப்பதை உணர்ந்துகொண்டேன். உங்கள் உற்சாகம் அடுத்தவர்களிடமும் தொற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டது என்பதையும் நான் அறிந்தேன்.
அப்போதே கணித்தேன்: அதுமட்டுமின்றி கமர்ஷியல் சினிமாவில் நீங்கள் வெல்வீர்கள் என்றும் அறிந்தேன். 30 வருட சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறீர்கள். உங்களது ஒவ்வொரு வெற்றியையும் விடாமுயற்சியால் சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள்.உங்களை பற்றி நான் உணரும் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப் பயணத்தில் உங்களுடன் நானும் இருப்பதில் பெரிய பெருமை எனக்கு. அதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.
ஆழமான முத்திரை: நீங்கள் உங்களுக்காக மட்டும் ஒரு பெயரை உருவாக்கவில்லை. பலரது இதயங்களில் ஒரு அழியாத ஆழமான முத்திரையை பதிவு செய்திருக்கிறீர்கள். 30 ஆண்டு சினிமா மாயாஜாலமும், இன்னும் சினிமா ப்ளாக் பஸ்டர்களை பார்ப்பீர்கள். வாழ்க்கையில் எனது துணையாக உங்களை பெற்றதை எப்படியெல்லாம் உணர்கிறேன் என்பதை என்னால விவரிக்கவே முடியவில்லை" என்றார். சுந்தர்.சி இப்போது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











