மாற்றுத்திறனாளி ரசிகரைச் சந்தித்தது குத்தமா? கிளம்பிய சர்ச்சை.. கிச்சா சுதீப்புக்கு வந்த தலைவலி?
பெங்களூர்: கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுதீப் எனப்படும் கிச்சா சுதீப். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர், நான் ஈ படத்தின் மூலம் தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட சுதீப் தற்போது மேக்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு முன்னர் கொஞ்ச காலம் ஓய்வில் இருக்கும் சுதீப் அவரது தீவிர ரசிகர் ஒருவரைச் சந்தித்துள்ளார். இதுதொடர்பான வீடியோதான் தற்போது கன்னட சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளி ரசிகரைச் சந்தித்த சுதீப்: அந்த வீடியோவில் நடிகர் சுதீப்பைச் சந்திக்க பேசுவதில் சவாலைச் எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி ரசிகர் நடிகர் சுதீப்பின் வீட்டிற்கே சென்றுள்ளார். மாற்றுத்திறனாளி ரசிகர் தான், நடிகர் சுதீப்பைச் சந்தித்தவுடன் என்ன தெரிவிக்க வேண்டும் என்பதை கடிதம் ஒன்றில் எழுதி கொண்டு சென்றுள்ளார். மேலும் நடிகர் சுதீப் மற்றும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இருக்கும் பெயிண்டிங்கை பரிசளிக்க கொண்டு சென்றுள்ளார்.
சுதீப்பைச் சந்தித்ததும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பின்னர் அந்த கடிதத்தைக் கொடுத்துள்ளார் மாற்றுத்திறனாளி ரசிகர். கடிதத்தை வாங்கிப் படித்த நடிகர் சுதீப், மாற்றுத்திறனாளி ரசிகரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேளுங்கள் நான் செய்கின்றேன் எனக் கூறுவது போல உடல் மொழியில் கேட்கின்றார். அதற்கு மாற்றுத்திறனாளி ரசிகர், நீங்கள் எது கொடுத்தாலும் அதனை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்பதுபோல் சைகை காட்டினார்.
உடனே அங்கிருந்து வீட்டிற்குள் சென்ற நடிகர் சுதீப் கவர் ஒன்றில் கொஞ்சம் பணம் வைத்துக் கொடுத்ததைப் போல் தெரிகின்றது. இதனைப் பெற்ற மாற்றுத்திறனாளி ரசிகர், மீண்டும் நடிகர் சுதீப் காலில் விழுந்தார். உடனே ரசிகரைத் தூக்கிய நடிகர் சுதீப், வீட்டிற்குள் செல்ல ஆயத்தமானார். ஆனால் ஒரு நொடி நின்ற சுதீப், தனது மாற்றுத்திறனாளி ரசிகரிடம், சாப்பிட்டீங்களா எனக் கேள்வி கேட்பதைப் போல சைகை காட்டிவிட்டு, இருந்து சாப்பிட்டுவிட்டு போங்க என்பது போல் அன்புக் கட்டளை இட்டுள்ளார். அந்த மாற்றுத்திறனாளி ரசிகரும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

சர்ச்சை: மேலே குறிப்பிட்டவை அனைத்தும் இணையத்தில் பரவிவரும் வீடியோவில் உள்ளது. இந்நிலையில், கன்னட சினிமா ரசிகர்கள் சிலர், நடிகர் சுதீப் தனது ரசிகரை ஏன் வீட்டிற்குள் அழைத்துச் செல்லாமல் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பேசிவிட்டும், அங்கேயே அவரை அமர வைத்து சாப்பிட வைத்ததும் ஏன் என்ற கேள்வியை சரமாரியாக எழுப்பி வருகின்றனர். தன்னைப் பார்க்க நீண்ட தூரத்தில் இருந்து பயணப்பட்டு வந்த ரசிகரை வீட்டிற்குள் அழைத்து அமரவைத்துக் கூட பேச வைக்க சுதீப்பிற்கு மனமில்லையா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
தன்னைப் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து, அவர் கொடுத்த அன்புப் பரிசை பெற்றுக்கொண்டது மட்டும் இல்லாமல், தனது ரசிகருக்கு உதவியும் செய்துள்ளார். ஆனால் அது தனக்கு இதுபோன்ற விமர்சனங்களைப் பெற்றுத்தரும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றதாம்.


Click it and Unblock the Notifications











