Killer Update: இது அன்பால் இணைந்த இதயம்.. SJ சூர்யாவின் கில்லர் படத்தில் இணைந்தார் இசைப்புயல்!
சென்னை: நடிப்பு அரக்கன் என பெயர் பெற்ற பின்னர், மீண்டும் தனது இயக்குநர் பணி மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. நீண்ட நாட்களாவே அவர் சொல்லிக் கொண்டு இருந்த கில்லர் படத்தை இயக்கும் பணிகளை தொடங்கி விட்டார். படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிப்பை ஏற்கனவே அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார்.
இயக்குநராக தனது முதல் படத்தில் இருந்தே கவனம் ஈர்த்து வந்தவர் எஸ்.ஜே. சூர்யா. அஜித்தை வைத்து வாலி, விஜய்யை வைத்து குஷி என அடுத்தடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் அவரது இயக்கத்தில் வெளியான நியூ படம் திரைத்துறையில் மட்டும் இல்லாமல் சமூகத்திலும் பரபரப்பை உருவாக்கியது. இந்த படத்தின் சென்சாரின் போது, அப்போதைய சென்சார் அதிகாரியாக இருந்த தற்போதைய எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், எஸ்.ஜே. சூர்யா. அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே. சூர்யாவே நடித்திருந்தார். அதன் பின்னர் அவரது இயக்கத்தில் வெளியான இசை படத்தில் அவரே நடித்தது மட்டும் இல்லாமல், இசையமைப்பாளராகவும் உருவெடுத்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பல சர்ச்சைகளை உருவாக்கியது.

நடிப்பு அரக்கன்: அதன் பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் படங்கள் இயக்குவதில் இருந்து விலகி இருந்த எஸ்.ஜே. சூர்யா அதன் பின்னர் நடிப்பில் முழுக்க முழுக்க களமிறங்கினார். நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் என மாறியது. குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்களில் அவர் கலக்கோ கலக்கு என கலக்கி வருகிறார். இறைவி, மான்ஸ்டர், ஸ்பைடர், மெர்சல், மாநாடு, அண்மையில் வெளியான வீர தீர சூரன் பாகம் 2 ஆகிய படங்கள் எல்லாம் அடி தூள் எனக் கூறும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: வில்லத்தனம், அத்தோடு ஒரு நகைச்சுவை என எஸ்.ஜே. சூர்யாவைப் போல் நடிக்க இப்போதைக்கு தமிழ் சினிமாவில் யாரும் இல்லை. இவர் தனது கில்லர் படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரத்தை எடுக்கிறார். இது தொடர்பாக ஏற்கனவே பல முறை அவர் பேசி இருந்தாலும், இப்போது மிகத் தீவிரமாக தனது கில்லர் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை கூட வேண்டாம் என மறுத்துவிட்டார்.
இசைப்புயல்: ஏற்கனவே படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது எனத் தெரிவித்திருந்த அவர், இப்போது படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் " நாம் இருவரும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம், நாம் தொட்டது எதுவும் அமையும், இது அன்பால் இணைந்த இதயம், இது அன்பால் இணைந்த இதயம்" என அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் பாடல் வரிகளையும் சேர்த்துள்ளார். கில்லர் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளர் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











