தேசிய விருதால் என்ன பயன்?.. மறைந்த கிஷோரின் தந்தை உருக்கம்
சென்னை: இந்த சினிமா என் மகனுக்கு என்ன செய்தது? என்று மறைந்த தொகுப்பாளர் கிஷோரின் தந்தை வேதனை தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த படத்தொகுப்பாளர் விருது மறைந்த கிஷோருக்கு கிடைத்தது.
சிறந்த படம், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் உட்பட 3 தேசிய விருதுகளை வெற்றிமாறனின் விசாரணை வென்றது.

கிஷோர்
சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கடந்த ஆண்டு மறைந்த எடிட்டர் கிஷோருக்கு கிடைத்திருகிறது. இதன்மூலம் இறந்தும் தன்னுடைய பெற்றோர் மற்றும் தான் உயிராக நேசித்த சினிமாத் துறைக்கு கிஷோர் பெருமை சேர்த்திருக்கிறார். ஆனால் இந்த விருதை மற்றவர்கள் கொண்டாடும் அளவுக்கு கூட கிஷோரின் பெற்றோர் கொண்டாடவில்லை.

தியாகராஜன்
இதுகுறித்து அவரின் தந்தை தியாகராஜன்(73) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் " என் மகனின் கடின உழைப்புக்கு 2 வது தேசிய விருது கிடைத்திருக்கிறது. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய கடின உழைப்பால் இந்த உயரத்தை அவன் அடைந்தான். தான் நேசித்த இந்த சினிமாவிற்காக கிஷோர் திருமணமே செய்து கொள்ளவில்லை. என் மகன் இறந்து 1 வருடம் கடந்து விட்டது. ஆனால் இந்த சினிமாத்துறை எங்களைக் கண்டுகொள்ளவில்லை.

ஆடுகளம்
ஆடுகளம் படத்தின்போது என்னுடைய மகனும், தனுஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கடந்த வருடம் என் மகன் இறந்த பின், தனுஷ் இதுவரை ஒரு போன் கூட எனக்கு செய்யவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன், சரத்குமார், லாரன்ஸ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் நிறைய உதவிகளை செய்திருக்கின்றனர்.

பிரகாஷ் ராஜ்
என் மகன் பிரகாஷ் ராஜின் 2 படங்களுக்கு வேலை செய்திருக்கிறான். அதற்காக அவர் கொடுக்க வேண்டிய ரூ 3 லட்சத்தை இன்னும் எங்களுக்கு தரவில்லை. இந்த சூழ்நிலையில் தேசிய விருதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என்று வேதனையுடன் கேட்டிருக்கிறார்.இயக்குநர் வெற்றிமாறனுடன் பணியாற்றிய ஆடுகளம், விசாரணை என 2 படங்களுமே, கிஷோருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
2 வது தேசிய விருதின் மூலம் இறந்தும் நீங்கள் உயிர்வாழ்கிறீர்கள் கிஷோர்...


Click it and Unblock the Notifications











