மாயாஜாலில் ஒரு நாளைக்கு 100 காட்சிகள்... கோச்சடையான் புதிய சாதனை!
சென்னையில் உள்ள மாயாஜால் அரங்கிரல் ரஜினியின் கோச்சடையான் படம் நாளொன்றுக்கு 100 காட்சிகள் வீதம் வெளியாகவிருக்கிறது.
இதுவரை எந்தப் படத்துக்கும் இத்தனை காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை. இதற்கு முன் வெளியான ரஜினியின் எந்திரனுக்குக் கூட 90 காட்சிகள்தான். ஆனால் அதையும் தாண்டியுள்ளது கோச்சடையான்.

மாயாஜாலில் மொத்தம் 16 அரங்குகள் உள்ளன. இவற்றில் தினசரி நான்கு காட்சிகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. முதல் காட்சி 7 மணிக்குத் தொடங்குகிறது. கடைசி காட்சி இரவு 11.44-க்கு. அதுவரை தொடர் காட்சிகளாக படங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.
இந்தக் கணக்குப்படி ஒரு நாளைக்கு நூறுக்கும் அதிகமான காட்சிகள் மாயாஜாலில் திரையிடப்படுகின்றன.
முன்பு ரஜினியின் எந்திரன் படம் வெளியானபோது, அந்தப் படம் முதலில் 81 காட்சிகளும், அடுத்த வாரத்திலிருந்து 90 காட்சிகளுக்கு மேலும் திரையிடப்பட்டது.
அந்த சாதனையை கோச்சடையான் படம் முறியடித்துள்ளது.
கோச்சடையான் 2 டி, 3டி மற்றும் ஆரோ 3 டி என மூன்று வடிவங்களில் இந்த அரங்கில் வெளியாகிறது. இந்த மூன்றும் சேர்த்து நாளொன்றுக்கு நூறு காட்சிகளாக இந்தப் படம் ஓடவிருக்கிறது.
நேற்று மாலைக்குப் பிறகுதான் மாயாஜாலில் கோச்சடையானுக்கு முன்பதிவு தொடங்கியது. நாளைக்குள் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிடும் என நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











