கோச்சடையான் பிஸினெஸ்... உண்மை நிலவரம் என்ன?
சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் வரும் மே 9-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படம் குறித்து பல்வேறு எதிர்மறைச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஒருபக்கம், படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தன் முந்தைய படங்களின் நஷ்டத்துக்குத் தரவேண்டிய பாக்கித் தொகைக்காக திரைப்பட கூட்டமைப்பு நெருக்கடி தர ஆரம்பித்திருப்பதாக செய்திகள்.
இன்னொரு பக்கம், படத்தின் வர்த்தகம் குறித்து. இந்தப் படம் இன்னும் முழுசாக விற்கப்படவில்லை என்றும், அதிக விலை சொல்வதால் வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குவதாகவும் கூறப்பட்டது.

இப்போது உண்மை நிலவரம் குறித்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இழப்பீட்டுக்கு பதில் படத்தைக் கேட்கும் விநியோகஸ்தர்கள்..
விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பினர் கேட்கும் நஷ்ட ஈட்டுத் தொகையைத் தர முரளி மனோகர் தயாராகத்தான் இருக்கிறாராம். ஆனால் அவர்களோ, நஷ்ட ஈட்டுக்குப் பதில் கோச்சடையான் படத்தைத் தருமாறு கேட்கிறார்களாம்.
எனவே, 'நீங்கள் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். படத்தைத் தர மாட்டேன். நானே சொந்தமாக வெளியிட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாராம் முரளி மனோகர்.
எனவே கோச்சடையான் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.. திட்டமிட்டபடி மே 9-ம் தேதி படம் வெளியாகிவிடும். தமிழகத்தில் மட்டும் 750 அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்படும் என்கிறார்கள்.
விற்பனையாகவில்லையா...?
கோச்சடையான் படம் விற்பனையாகவில்லை என்பதையும் மறுக்கிறார் ஒரு பிரபல விநியோகஸ்தர்.
அவர் கூறுகையில், 'இந்தப் படத்துக்கு சற்று அதிக விலையைத்தான் முரளி மனோகர் நிர்ணயித்தார். அதைத் தர அனைவரும் தயாராக இருந்தாலும், ரஜினி எதிலும் தலையிட மறுப்பதால் தயங்குகின்றனர்.
ஆனால் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் முரளி மனோகர், சொந்தமாக வெளியிடத் தயாராக இருக்கிறார். எனவே இதில் படம் விற்பனையாகவில்லை என்று கூற எதுவுமில்லையே," என்றார்.
கேயார் பேச்சு..
நிலைமை இப்படி இருக்க, கோச்சடையான் படம் சற்றுத் தாமதமாகத்தான் விற்பனையானது என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நேற்று கூறியிருப்பது மேலும் குழப்பத்தைக் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











