கேரள ஷெட்யூல் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி!
சௌந்தர்யா இயக்கும் முதல் 3 டி அனிமேஷன் படம் கோச்சடையான். இது சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். ரஜினி இதில் புகழ்பெற்ற கோச்சடையான் மன்னர் வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார்.
மோஷன் கேப்சரிங் உத்தியில் உருவாகும் இந்தப் படத்தில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. மேலும் அனிமேஷன் முறையில் தமிழ் சினிமாவின் சாதனை நடிகர்கள் சிலரையும் இந்தப் படத்தில் உலவ விட சௌந்தர்யா திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் கடந்த மாதம் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் கேரளாவில் உள்ள சித்ராஞ்சலி மற்றும் விஸ்மாயா மேக்ஸ் ஸ்டுடியோக்களில் நடந்தது. இதிலும் ரஜினி கலந்து கொண்டார். தீபிகா படுகோன், ஆதி தொடர்புடைய காட்சிகளில் இங்கு படமாக்கப்பட்டன.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததால், ரஜினியும் படக்குழுவினரும் நேற்று முன்தினம் சென்னை திரும்பினர்.
இதுகுறித்து சௌந்தர்யா தன் ட்விட்டரில், "கோச்சடையான் இரண்டாவது ஷெட்யூல் சிறப்பாக முடிந்தது. சென்னை திரும்பிவிட்டோம். முக்கிய வேலைகளை முடித்துள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது", என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












