நடிகை கடத்தல் விவகாரம்... திலீப் கோரிக்கை, கோர்ட் நிராகரிப்பு !
கொச்சி: நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் திலீப்புக்கு டிஜிட்டல் ஆதாரங்களைத் தர முடியாது என்று கொச்சி விசாரணை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மலையாள ஹீரோ திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், நடிகை கடத்தித் தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியதாகக் கூறப்படும் மெமரி கார்ட் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

அதன் நகலை தனக்கு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திலீப் வழக்குத் தொடர்ந்தார். மெமரி கார்டில் உள்ளவற்றை நடிகர் திலீப் பார்க்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அதன் நகலை தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் கொச்சியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், சாட்சிகளிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை தர வேண்டும் என்று நடிகர் திலீப் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி, அந்த ஆதாரங்களைத் தர மறுத்து, இன்று உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











