பெயர்: முருகையன்... குற்றம்: விவசாயம் செய்தது... தண்டனை: தற்கொலை மரணம்!
இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட, அதிர்ச்சியில் இறந்த விவசாயிகள் எண்ணிக்கை மட்டும் 259. இன்னும் கூட கணக்கில் வராத பலிகள் இருக்கக் கூடும். காரணம்... விவசாயம் பொய்த்துப் போனதுதான்.
தமிழகத்தின் உயிர்க்கொடியான காவிரி வறண்டுபோய், நீர்நிலைகளும் காய்ந்துபோய் குடிநீருக்கே வழியில்லாத நிலைமை. இன்னொருபக்கம் இருக்கிற நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சிவிட்டு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கொடூரத் திட்டங்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் திட்டமிட்டே அழித்துக் கொண்டிருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.

ஒரு விவசாயியின் அதிகபட்ச சோகம், கண்ணெதிரே பயிர்கள் கருகுவதைப் பார்ப்பதுதான். அந்தக் கொடுமையைப் பார்க்கச் சகிக்காமல், அதிர்ச்சியில் சாகிறான் அல்லது தற்கொலை செய்துகொள்கிறான். இந்த வேதனைகளை ஒரு ஆவணப் படமாக உருவாக்கியிருக்கிறார் க ராஜீவ் காந்தி. பத்திரிகையாளராக இருந்து, திரைத்துறைக்கு வந்துள்ள இளம் இயக்குநர்.
இந்தப் படத்துக்கு கொலை விளையும் நிலம் என்று தலைப்பிட்டுள்ளார். இந்த ஆவணப்படம் பற்றிக் கேட்டதுமே, பின்னணி குரல் தர ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி. பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். அந்தப் பாடலை இயக்குநர் ராஜு முருகன் எழுதியுள்ளார். கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தயாரிப்பு: சதக்கத்துல்லா, இணைத் தயாரிப்பு: எஸ் கவிதா
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நாளை பிரசாத் லேபில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











