நயன்தாரா ரசிகர்களின் நம்பிக்கையை கொலை செய்த கொலையுதிர் காலம்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று வெளியிடப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்ததால் படத்தை பார்த்த ரசிகர்கள் பாதியில் எழுந்து சென்றனர்.
என்ன ஆயிற்று நம்ம லேடி சூப்பர் நயன்தாராவுக்கு என்று தான் கேட்கிறார்கள், அவருடைய நலம் விரும்பிகளும் ரசிக கண்மனிகளும். இவர்கள் அனைவரும் இப்படி கேட்க காரணம் நேற்று வெளியிடப்பட்ட கொலையுதிர் காலம் படம் தான். சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் அனைத்துமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அறம் படத்தில் நடித்த அந்த நயன் தாரா எங்கே என்று தான் அனைவரும் ஆதங்கப்படுகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் என்றும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் பெருமையோடு அழைக்கப்படும் நயன் தாரா, சில காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை பல்வேறு கோணங்களில் நிரூபித்துள்ளார். அவர் கொஞ்சமே கொஞ்சம் முகத்தை காட்டி நடித்தாலே, அப்படம் வெற்றியடையும் என்ற அளவுக்கு உச்சியில் இருக்கும் ஹீரோயின்.
நிலைமை அப்படி இருக்கையில், பல சர்ச்சைகளுடன் உருவாகி வெளியாவதில் பல சிக்கல் ஏற்பட்டு, குழப்பங்களுடன் தற்பொழுது வெளியாகியுள்ள படம் கொலையுதிர் காலம். சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி படு தோல்வியை அடைந்த பில்லா 2 படத்தை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம் கொலையுதிர் காலம்.
கொலையுதிர் காலம் படம் எடுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டாலும், படத்தை வாங்க யாரும் முன்வராததால், போனியாகாமல் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இதனால் படத்தை வெளியிடும் தேதி தொடர்ந்து மாற்றப்பட்டுக் கொண்டே வந்தது. ஒரு வழியாக நல்ல காலம் பிறந்து நேற்று மாலை இந்தப் படம் திரையரங்குகளில் மின்னத் தொடங்கியது.
வார இறுதி நாள் என்பதாலும், கூடவே லேடி சூப்பர் ஸ்டார் நடித்த படம் என்பதாலும், திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும் பட இடைவேளைக்கு முன்னதாகவே ரசிகர்கள் கூட்டம் குறைய தொடங்கியதால் திரையரங்கில் இருந்த மற்ற ரசிகர்கள் குழப்பத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.
படம் படு மொக்கையாக இருந்ததே இதற்கு காரணம் என்கின்றனர் படத்தை பார்த்த மற்ற ரசிகர்கள். படத்தில் மருந்துக்கு கூட சுவாரஸ்யம் என்பதே இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் படத்தில் அந்த கதையே இல்லை என்பது தான் ரசிகர்களின் ஆதங்கத்திற்கும் கூட்டம் குறைவதற்கும் காரணம். நிச்சயம் இந்தப் படம் தோல்வியை தழுவும் என்று தெரிந்தே, இந்த படத்தை தயாரிப்பாளர் வெளியீடு செய்ததற்கு என்ன காரணம் என்பது கேள்விக்குறியே.
நயன்தாராவின் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. வெற்றி படங்களிலேயே அடுத்துதடுத்து நடித்து வந்த நயன்தாராவுக்கு இது ஒரு பெரிய சறுக்கல் என்று தான் சொல்லனும். இருப்பினும் அவர் நிச்சயம் அடுத்தது ஒரு வெற்றி படத்துடன் வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











