டூவீலர் மோதியது.. பிரபல கிராமிய பாடகி கொல்லங்குடி கருப்பாயி படுகாயம்.. கால் எலும்பு முறிந்தது
மதுரை: பிரபல கிராமிய பாடகி கொல்லங்குடி கருப்பாயி, டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
Recommended Video
சிவக்கங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள கொல்லங்குடியை சேர்ந்தவர் கருப்பாயி (80).
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களை பாடியவர். இதற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்றவர்.

ஆண்பாவம்
பாண்டியராஜன் இயக்கிய 'ஆண்பாவம்' படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகம் ஆனார். அதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து, ஆயுசு நூறு, கோபாலா கோபாலா உட்பட சில படங்களில் நடித்தார். சில படங்களில் பாடவும் செய்தார். படப்பிடிப்பு, ரெக்கார்டிங் இருந்தால் மட்டும் சென்னை வரும் அவர், மற்ற நேரங்களில் சொந்த ஊரில் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவருக்கு சினிமா வாய்ப்பில்லை.

படுகாயமடைந்தார்
இந்நிலையில் காளையார் கோயிலில், கடைக்குச் சென்றுவிட்டு நேற்று முன் தினம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டூவீலர் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை, காரைகுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எலும்பு முறிவு
அவரை பரிசோதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள், அவர் காலில் பிளேட் வைக்கவேண்டும் என்று கூறினர். வயது முதிர்வு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் அவருக்கு மாவுகட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதியில் நிற்கிறது
இதுபற்றி அவரது உறவினர் ஒருவர் கூறும்போது, 'பாட்டியின் கால் சரியாக 8 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாட்டி. வேலைகளை தொடங்கினார். பணம் இல்லாததால் பாதியில் நிற்கிறது வீடு. நடிகர் சங்கம் உதவுவதாகக் கூறியது. உதவி கிடைக்கவில்லை' என்றார்.


Click it and Unblock the Notifications











