Bommai: நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா.. பொம்மை படத்தை பாராட்டிய பிரபலங்கள்!
சென்னை: நடிகர் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் பொம்மை.
இந்தப் படத்தை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள முதல் த்ரில்லர் படம் பொம்மை.
யுவன் சங்கர் ராஜா இசையில் பொம்மை படம் சிறப்பான பாடல்கள் மற்றும் பிஜிஎம்முடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பொம்மை படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு: நடிகர் எஸ்ஜே சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய், சிவகார்த்திகேயன், விஷால், கமல்ஹாசன் என தமிழின் முன்னணி நடிகர்கள் படங்களில் இவரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. இவரது நடிப்பு அந்த கேரக்டரை சிறப்பாக மாற்றி விடுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் திரையுலக பிரபலங்களும் இவரது நடிப்பை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாகவும், கேரக்டர் ரோல்களிலும், தனியாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் இவரை பார்க்க முடிகிறது. தற்போது இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் இரண்டு படங்களிலும் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் என இரு படங்களிலும் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் இன்றைய தினம் பொம்மை படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் இவருக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார். எப்போதும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவந்த ராதாமோகன், தற்போது முதல் முறையாக த்ரில்லர் ஜானரில் பொம்மை படத்தை இயக்கியுள்ளார். சைக்காலாஜிகல் த்ரில்லராக பொம்மை படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பொம்மை புதுமையான மற்றும் எமோஷனலான காதல் கதை என்றும், படம் பார்ப்பவர்களை ஏதோவொரு வகையில் இந்தப் படம் டச் பண்ணும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல படத்தை பார்த்த இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், பொம்மை படம் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு வியப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி கீதாஞ்சலி, எஸ்ஜே சூர்யா படத்தில் வித்தியாசமாக செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சுனில் ராஜ் ஜெயின் கூறுகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காகவே இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். படத்தை பார்த்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ், 2 நிமிடங்கள் சிங்கிள் ஷாட்டில் எஸ்ஜே சூர்யா மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா நடிப்பு அரக்கன் என்று பாராட்டியுள்ளார். இந்த அடைமொழி அவருக்கு போதுமா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











