பதினைந்து கோடி செலவழிக்கப்பட்ட விழா பைசா பெறாம போச்சே!- கோலிவுட் கமெண்ட்
கடந்த இரு தினங்களாக ஐ பட இசை வெளியீட்டு விழா சொதப்பல்கள்தான் கோலிவுட்டின் அத்தனை பேர் வாயிலும்!
அர்னால் ஷ்வார்ஷநெக்கர் சிறப்பு விருந்தினராக வந்தது, பாதியில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போனது, விழாவில் கடைசி வரை அமர்ந்து ரஜினி காப்பாற்றியது போன்றவற்றைப் பற்றித்தான் அத்தனைப் பேரும் பேசி வருகிறார்கள்.
இதில் உச்சகட்ட திட்டும் விமர்சனமும் பெறுபவர்கள், விழாவுக்குப் பொறுப்பாளரான ஷங்கரும், விழவைத் தொகுத்து வழங்கிய சின்மயி - சிம்ஹாவின் அரைவேக்காட்டுத்தனமும்தான்.

விழா தொடங்க 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது. ஆனால் அதற்காக குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கூட கேட்காத சின்மயி, நல்ல விஷயங்களுக்காக காத்திருப்பது தப்பில்ல என்று கடுப்பேற்றினார்.
அவரது அந்த ஆரம்ப சொதப்பல் கடைசி வரை தொடர்ந்தது. அவர் பேசும் முறை, தொணி அத்தனை பேரையும் எரிச்சலுக்குள்ளாக்கியது, பொறுமையின் சிகரமாக அமர்ந்திருந்த ரஜினியையும்.
குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாமல், அர்னால்டின் தோளில் கைபோட்டு, அவர் பேசிக் கொண்டிருந்த மைக்கை கையால் மறைத்து, நீங்க கடைசிலதான் பேசணும்.. நான் கூப்பிடும் வரை இருக்கையில் அமருங்கள் என, ஒரு கத்துக்குட்டி நடிகரான பாபி சிம்ஹா சொன்னதுதான் நிகழ்ச்சியின் உச்சகட்ட அநாகரீகம். விடுங்க.. நான் என் பாணியில் பேசறேன் என்று கூறிவிட்டு, எழுதி வைத்துக் கொண்டு வந்திருந்ததைப் பேசாமல், சும்மா நான்கு வரிகள் மட்டும் பேசிவிட்டு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினார் அர்னால்ட்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணமாகவே அமைந்தன, ரஜினியின் பேச்சைத் தவிர. தன்னை எப்போது பேச அழைக்கப் போகிறார்கள் என்று கடுப்புடன் உட்கார்ந்திருந்தார் ரஜினி.
இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்திருக்க வேண்டிய நிகழ்ச்சியை, கட்டுக் கோப்பாக நடத்தாமல், ஜெயா டிவிக்காக இழுத்து சொதப்பியதில், மொத்த நிகழ்ச்சியும் கெட்டுப் போனது.
ரூ 15 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை இரண்டு தொகுப்பாளர்கள் பணாலாக்கிட்டாங்களே.. என்பதுதான் பெரும்பாலானவர்களின் கமெண்ட்!


Click it and Unblock the Notifications











