'சிட்டி, ப்ளெட்சர், விநாயக் மகாதேவ், ஆத்ரேயா...'... தமிழ் சினிமாவின் வில்லாதி வில்லன்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஹீரோ, வில்லன் என பிரித்துப் பார்த்து நடிகர்கள் நடிப்பதில்லை.
ரசிகர்களும் ஹீரோக்களின் வித்தியாசமான வேடங்களை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டனர். முன்போல யாரும் ஹீரோ நல்லவனாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில்லை.
ஹீரோ கெட்டவனாக நடித்தாலும் படம் வெரைட்டியாகவும், ரசிக்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஹீரோக்களே கொடூரமான வில்லன்களாக மாறி கலக்கிய சில கேரக்டர்களைப் பார்க்கலாம்...

சிட்டி.. தி ரோபோ
எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி என 2 வேடங்களில் ரஜினி நடித்திருப்பார். இதில் ரோபோவாக வரும் சிட்டி இடைவேளைக்குப் பின் கொடிய வில்லனாக மாறிவிடும். ஐஸ்வர்யா ராயைக் காதலிக்கும் சிட்டி அதற்காக தனக்கு உயிர்கொடுத்த விஞ்ஞானி என்றும் பாராமல், வசீகரனைக் கொல்ல முயற்சி செய்யும். இப்படத்தில் நல்லவனாக நடித்த வசீகரனை விட கெட்டவனாக நடித்த சிட்டிதான் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

பிளட்சர்
கமல் 10 வேடங்களில் நடித்து வெளியான படம் தசாவதாரம். கமலின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு வேடத்திலும் கமல் இப்படத்தில் வித்தியாசம் காட்டி நடித்திருந்தாலும், வில்லன் பிளட்சர் வேடத்தில் அவர் மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களும் வியக்கும்படி கமலின் நடிப்பு இப்படத்தில் அமைந்திருந்தது.

விநாயக் மகாதேவ்
50 வது படம் என்று சிறிதும் தயங்காமல் மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் அஜீத். இட் இஸ் மை கேம் என்ற வசனம், திரிஷாவைக் காரிலிருந்து கீழே தள்ளும் வில்லத்தனம் என ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து படைத்திருந்தார். தமிழ் சினிமாவின் வழக்கமான விதிகளை உடைத்து அஜீத் நடித்த இப்படம் இன்றளவும் அவரது ரசிகர்களின் பேவரைட் படமாகத் திகழ்கிறது.

விக்டர்
என்னை அறிந்தால் என்ற ஒரே படத்தின் மூலம் அருண் விஜய் அடைந்த உயரம் அவர் கனவிலும் நினைக்காத ஒன்று. சிக்ஸ் பேக் வைத்து விக்டர் என்னும் அக்மார்க் வில்லனாக நடித்திருந்த அருண் விஜய்யின் நடிப்பு இன்றளவும் அவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுக்கிறது. இப்படத்தில் நாயகனாக நடித்த அஜீத்தை விட அருண் விஜய்யே அதிக விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் அபிமன்யு
தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி வில்லனா? என்று ஆச்சரியப்படாதவர்களே இல்லை. ஆனால் படம் வெளியானபின் ஜெயம் ரவியின் ஹீரோயிசத்தை விட அரவிந்த் சாமியின் வில்லத்தனமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது தெலுங்கு, இந்தி, தமிழ் என 3 மொழிகளிலும் பிஸியான நடிகராக மாறிவிட்டார்.

ஆத்ரேயா
தமிழ் சினிமாவின் புதிய வில்லன் சூர்யா. சேதுராமன், மணி, ஆத்ரேயா என 3 வேடங்களில் சூர்யா நடித்த 24 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக ஆத்ரேயா என்னும் வில்லன் வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். வழக்கம்போல ஹீரோ சூர்யாவை விட வில்லன் ஆத்ரேயாவே ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











