சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!
கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார்.
உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார்.
இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications











