விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் கொம்பூசீவி.. மொக்கை படம்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். அவர் இப்போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் உள்ளிட்டோரை வைத்து கொம்புசீவி படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நேற்று ரிலீஸான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கொம்புசீவி விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
சகாப்தம் என்ற படத்தின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியனுக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; விஜயகாந்த்தின் மறைவுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார். அந்தவகையில் படைத்தலைவன் படத்தில் நடித்த அவர்; இப்போது பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பு: சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம் என்பதால்; தனக்கும் அப்படி ஒரு வெற்றியை கண்டிப்பாக கொடுப்பார் என்ற நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடித்தார். இதில் அவருடன் சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படமானது நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது.
எப்படி இருக்கு படம்?: படம் பார்த்த ரசிகர்களுக்கு முழுவதுமாக பிடிக்கவில்லை. படத்தில் காமெடி, ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் திரைக்கதை ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாக இல்லை என்பது பலரது கருத்து. மேலும் உணர்வுப்பூர்வமாகவும், வலியோடும் சொல்லியிருக்க வேண்டிய ஒரு உண்மை கதையை பொன்ராம் காமெடி செய்திருக்கிறார் என்றும் குரல்கள் கேட்கின்றன. அதேசமயம் சண்முக பாண்டியனின் நடிப்புக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. வசூலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத கொம்புசீவி நேற்று 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கொம்புசீவி படத்துக்கான விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில், "வைகை அணையை கட்டும்போது 12 கிராமத்தினரை வெளியேற்றிவிட்டுத்தான் கட்டினார்கள். அப்படி அவர்கள் வாழ்வாதாரத்தை தேடி போகும்போது தவறான வழியில் செல்கிறார்கள் என்பதை; படத்தில் ஹீரோவும், சரத்குமாரும் கஞ்சா கடத்திக்கொண்டு ஜாலியாக இருந்தார்கள். அவர்களுக்கு இடையூறு கொடுக்கும் விதமாக ஒரு அதிகாரி வில்லனாக வந்தார் என்று காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் பலவீனம்: சீரியஸாக பண்ண வேண்டிய சீனை எல்லாம் இவர்கள் எல்லாம் காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் இவர்கள் செய்ததை பார்த்து கடுப்புதான் வந்தது. அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு கேரக்டரையும் ஆழமாக எழுதவில்லை; எந்த ஒரு சீனையும் ஆழமாக எடுக்கவில்லை. ஹீரோ மீது ஒரு பொய் வழக்கு போடுவார்கள். அதிலிருந்து எப்படி தப்பித்து வந்தார் என்பதை சீரியஸாக செய்யாமல் காமெடியாக செய்து வைத்திருக்கிறார்கள். சரியான கதையை எடுத்து தவறான ட்ரீட்மென்ட்டினால் மொக்கை படத்தை கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











