மகன் இறந்த சோகம்.. மனம் உடைந்து போன கோட்டா சீனிவாச ராவ்.. அவர் வாழ்வில் இவ்வளவு வலி இருந்ததா?
சென்னை: சாமி, திருப்பாச்சி, கோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்ற கோட்டா சீனிவாச ராவ் இன்று அதிகாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். சமீபத்தில்தான் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் உயிரிழந்திருப்பது அனைவருக்குமே சோகத்தை உண்டு செய்திருக்கிறது. இந்நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருந்தவர் கோட்டா சீனிவாச ராவ். நாடகங்களிலிருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவருக்கு; திரையுலகில் அறிமுகமான முதல் சில வருடங்களில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. மனம் தளராத அவர் தொடர்ந்து நடித்து 80களில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக் மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அறிமுகம்: தெலுங்கில் 90களில் எல்லாம் கைகளில் பிடிக்க முடியாத நடிகராக மாறிவிட்டார். அதுமட்டுமின்றி பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. தெலுங்கில் பம்பரமாக சுழன்றுகொண்டிருந்த அவரை ஹரி தான் இயக்கிய சாமி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் செய்துவைத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. கோட்ட சீனிவாச ராவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

இங்கும் பிஸிதான்: சாமி படத்தில் அவர் ஏற்றிருந்த பெருமாள் பிச்சை கேரக்டர் படம் வெளியான சமயத்தில் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. தனது வித்தியாசமான பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவிரி என அந்த கேரக்டருக்கு அவ்வளவு அற்புதமாக உயிர் கொடுத்திருந்தார் கோட்டா. இதன் காரணமாக பலரும் அவரது உண்மையான பெயரே பெருமாள் பிச்சைதானோ என்று பேசும் அளவுக்கு நிலைமை சென்றது.
விஜய்யுடன்: சாமி படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு கோலிவுட்டிலும் வாய்ப்புகள் வர தொடங்கின. அந்தவகையில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். இவர் தவிர்த்து அந்தப் படத்தில் இன்னும் இரண்டு வில்லன்கள் இருந்தார்கள். இருப்ப்பினும் இந்த சனியன் சகடை என்ற பெயருக்காகவும், கோட்டா சீனிவாச ராவ் நடித்த விதத்துக்காகவும் பெருமாள் பிச்சை போல் அந்தக் கேரக்டரும் கொண்டாடப்பட்டது. மேலும் கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் அவர்.
இந்நிலையில் கோட்டா சீனிவாச ராவ் கடந்த சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். சமீபத்தில்கூட ஆளே மாறிப்போய் இருந்த புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. எப்படியாவது அவர் நலமுடன் மீண்டு வந்துவிட வேண்டுமென்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உடல் நல குறைவால் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க் அவரது வாழ்க்கையில் நடந்த வலியான சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோட்டாவின் குடும்பம்: அதாவது கோட்டா சீனிவாசராவுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். அவரது மகனான கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத்தும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க கடந்த 2010ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பைக்கில் சென்றார். ஆனால் அப்போது அவருக்கு சாலை விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஆஞ்சநேய பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு கோட்டா சீனிவாச ராவின் மனதை ரொம்பவே தாக்கிவிட்டதாம்.
மகன் இறந்த சோகத்திலேயே இருந்த அவர் நடிப்பில் கவனத்தை செலுத்தினாலும்; வாழ்க்கையில் பெரிய பிடிப்பு ஒன்று போய்விட்டதாகவே உணர்ந்தார் என்றும்; அந்த மன வலியும் கோட்டாவின் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











