சூரி காட்டில் சூறைக்காத்துதான்.. கொட்டுக்காளி படத்துக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

பரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் பரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 பரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது.
கொட்டுக்காளி: விடுதலை 2வுக்கு பிறகு சூரி ஹீரோவாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் அப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். கூழாங்கல் படம் ஏற்கனவே பெரும் கவனத்தை ஈர்த்திருப்பதால் இப்படத்தின் மீதும் அதிக கவனம் இருக்கிறது. இதில் நெகட்டிவ் ரோலில் சூரி நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்காக தனது தொண்ட கட்ட வேண்டுமென்பதால் மருத்துவரின் அறிவுரையின்பேரில் தனது தொண்டையையும் கட்ட செய்திருக்கிறார் சூரி.
சர்வதேச அளவில் பாராட்டு: இந்நிலையில் கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்திருக்கிறது. அதாவது ஜெர்மனியில் பிப்ரவரி 15 முதல் 25ஆம் தேதிவரை நடைபெற்ற பெர்லினாலே சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் தங்களது பாராட்டை பெருமளவு தெரிவித்தனர்.
இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொட்டுக்காளியின் முதல் சர்வதேச மேடை.. பெர்லினாலே சர்வதேச திரைப்பட விழாவில் மறக்க முடியாத மரியாதையை கொடுக்காளி விட்டுச்சென்றிருக்கிறது. அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருக்கிறர். முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











