கோவை குணா மரணம்: கலக்கப்போவது யாரு சீஸன் 2வின் சாம்பியன் உருக்கமான பதிவு!!
சென்னை: கோவை குணா மரணமடைந்திருக்கும் சூழலில் கலக்கப்போவது யாரு சீஸன் 2வின் சாம்பியன் வெங்கடேஷ் ஆறுமுகம் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர்கள் அதிகம். திரைப்படம் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு ஈடாக சின்னத்திரை நிகழ்ச்சிகளும் தாக்கத்தை செலுத்தும். அதிலும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்றால் ஒருகாலத்தில் மக்கள் விரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்படி கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கோவை குணா.

கோவை குணா எனும் மிமிக்ரி கலைஞர்
கோவை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட குணா கலை மீது கொண்ட ஆர்வத்தால் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். மிகச்சிறப்பாக மிமிக்ரி செய்யக்கூடிய அவர் எம்.ஆர்.ராதா, லூஸ் மோகன் உள்ளிட்டோரின் குரலை அச்சு அசலாக பேசக்கூடியவர். அவர்களது குரல் மட்டுமின்றி அப்படியே உடல்மொழியையும் வெளிக்கொணரக்கூடியவர்.

கல்லக்கப்போவது யாரு டைட்டில் வின்னர்
விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் முதல் சீஸனில் கலந்துகொண்டார் கோவை குணா. நிகழ்ச்சியில் அவர் செய்த மிமிக்ரியும், நகைச்சுவையும் ரசிகர்க்ளை வெகுவாக் கவர முதல் சீசனின் டைட்டில் வின்னரானார் அவர். அதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்தவர்.

கோவை குணா உயிரிழப்பு
இந்நிலையில் மிமிக்ரி கலைஞர் கோவை குணா உடல்நலக்குறைவால் கடந்த ஒருவார காலமாக பாதிக்கப்பட்டிருந்தார். எனவே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4 மணியளவில் அவர் உயிரிழந்தார். உடலானது நாளை தகனம் செய்யப்படவிருக்கிறது. அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

கலக்கப்போவது யாரு சீஸன் 2 சாம்பியன் வெங்கடேஷ் ஆறுமுகம் இரங்கல்
அந்த வகையில் வெங்கடேஷ் ஆறுமுகம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இவர் கலக்கப்போவது யாரு சீஸன் 2வின் சாம்பியன் ஆவார். அவர் பதிவிட்டிருக்கும் முகநூல் பதிவில், " கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னரும் எங்கள் உடன் பிறவாத சகோதரரான அண்ணன் கோவை குணா இன்று இறைவனடி சேர்ந்தார்! முதலில் விஜய் டிவியிலும் பிறகு சன் டிவியிலும் வந்து மக்கள் மனங்கவர்ந்த நகைச்சுவையாளராக அறியப்பட்டவர்! பல பட்டங்களையும் விருதுகளையும் வென்றவர் சிறந்த மனிதாபிமானி கொஞ்சமும் செருக்கு இல்லாதவர்!

சிம்மக்குரலோன்; சிரிப்பு குரோலன்
சிவாஜி கணேசனைப் போல சிம்மக்குரலோன்! பல குரல் திறமையில் சிரிப்புக் குரலோனும் கூட! மிமிக்ரி மட்டுமின்றி அந்தந்த நடிகர்களின் உடல் மொழியையும் வெளிக் கொண்டுவரும் ஒப்பற்ற கலைஞன்! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்களை தனது அரிய நகைச்சுவைத் திறனால் சிரிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞன்.

அசத்தல் குடும்பம் கவலையில் இருக்கிறத்
இன்று நம்மோடு இல்லை! அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் அசத்தல் குடும்பத்திற்கும் இது ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறோம்! கண்ணீருடன் அசத்தல் குடும்பத்தினர்" என உருக்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











