மகளின் மடியில் பிரிந்த உயிர்.. கோவை குணா மரணத்தில் கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
கோயம்புத்தூர்: மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணா இறந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர்கள் அதிகம். அப்படி பிரபலமடைந்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், வடிவேலு பாலாஜி உள்ளிட்டோர். அந்தவகையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கோவை குணா.

மிமிக்ரி கலைஞர்களுக்கு முன்னோடி
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட குணா சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆவார். பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா, லூஸ் மோகன் உள்ளிட்டோரின் குரலை அச்சு அசலாக பேசக்கூடியவர். அவர்களது குரல் மட்டுமின்றி அப்படியே உடல்மொழியையும் வெளிக்கொணரக்கூடியவர். பல குரலில் பேச மட்டும் செய்யாமல் பாடியும் அசத்துபவர் அவர்.

டைட்டில் வின்னரான கோவை குணா
விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் முதல் சீஸனில் கலந்துகொண்டார் கோவை குணா. நிகழ்ச்சியில் அவர் செய்த மிமிக்ரியும், நகைச்சுவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் முதல் சீசனின் டைட்டில் வின்னரானார் அவர். அதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்தவர்.

உயிரிழந்த கோவை குணா
இந்தச் சூழலில் மிமிக்ரி கலைஞர் கோவை குணா உடல்நலக்குறைவால் கடந்த ஒருவார காலமாக பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை அவர் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. கோவை குணாவின் உயிரிழப்புக்கு சின்னத்திரை கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

கோவை குணா மரணம்.. அன்று நடந்தது என்ன?
இந்நிலையில் கோவை குணாவின் மரணம் குறித்து பலரும் பேசிவருகின்றனர். தற்போது அவரது மனைவி கோவை குணாவின் மரணத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், "ஒருவாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவே இல்லை. அதற்காக மருந்துகள் சாப்பிட்டுவந்தார். ஆனால் அப்போதும் அவருக்கு சரியாகவில்லை.

ரத்த பரிசோதனை முடிவு வரவில்லை
இதன் காரணமாக அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினோம். ஆனால் அது இன்னமும் வந்து சேரவில்லை. அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு அவரால் முடியவில்லை. அப்போதே ஏதோ ஆகப்போகிறது என்பது எனக்கு தெரிந்துவிட்டது. வலி மிகவும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்களிடம் அவர் கூறினார். அவர்களும் அனைத்து மருந்துகளையும் கொடுத்து பார்த்தனர். இருப்பினும் அவருக்கு குணமாகவில்லை.

மகள் மடியில் படுத்துக்கொண்ட கோவை குணா
அந்த சமயத்தில் என்னுடைய மகள் வந்தாள். அதுவரை என் மடியில் படுத்திருந்த அவர் மகள் வந்தவுடன் அவரது மடியில் படுத்துக்கொண்டார். அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே வாந்தியும் எடுக்க ஆரம்பித்தார். உடனே மருத்துவர்களை அழைத்து பார்த்தபோது எல்லாமே முடிந்துவிட்டது என்றார்கள். அவர் இத்தனை ஆண்டுகள் உயிருடன் இருந்தது அதிசயம்தான்" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











