எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே மணிரத்னத்தால்தான் - கோவைத் தம்பி

கோவைத் தம்பியின் இதயக் கோவில் படத்தை இயக்கியவர் மணிரத்னம். ஆனால் அவரோ சமீபத்தில் 'இதயக் கோவில் நான் எடுத்த மோசமான படம். அந்த கதைக்குள் தெரியாமல் சிக்கிவிட்டேன்' என்று பேட்டியளித்திருந்தார்.
அப்போதே மணிரத்னத்துக்கு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த கோவைத் தம்பி, மணிரத்னம் ஒரு மோசமான இயக்குநர் என்றார்.
இப்போது மீண்டும் மணிரத்னத்தை கடுமையாகத் திட்டியுள்ளார் கோவைத் தம்பி.
அவர் கூறுகையில், "மணிரத்னம் ஸ்கூட்டரில் என் அலுவலகத்துக்கு வந்து வாய்ப்பு கேட்டார். நான் இதயக்கோவில் கதையை கொடுத்து இயக்கச் சொன்னேன். தற்போது 28 வருடத்துக்கு பிறகு அது மோசமான படம். அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார்.
கதை பிடிக்காவிட்டால் அப்போதே மறுத்து இருக்கலாம். அவரொன்றும் சின்னப் பிள்ளையில்லை. உண்மையில் அப்போதுதான் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார்.
மணிரத்னத்துக்கு ஷாட் எடுக்க அப்போது சரியாக தெரியவில்லை. செட்டுக்குப் போட்ட பணம் வீணானது. கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். அவரை இயக்குநராகப் போட்ட பிறகுதான் இதெல்லாம் எனக்கே தெரிந்தது.
எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும் இவர்தான் காரணமாக இருந்தார். அதுவே எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிட்டது.
இதயகோவில் படத்தை நன்றாக இயக்கி இருந்தால் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருக்கும். 35 ரோலில் முடிக்க வேண்டிய படத்தை 70 ரோலுக்கு கொண்டு போய்விட்டார். இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு கதை அறிவே சுத்தமாகக் கிடையாது. சொந்தமாக கதை எழுதவும் தெரியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











