என்ன இவ்வளவு உதவி செய்யுறார்.. பாலா இப்போ செஞ்சிருக்க உதவி தெரியுமா?.. குவியும் வாழ்த்து
சென்னை: சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர் பாலா. அன்றிலிருந்து KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பாலாவை பொறுத்தவரை ஓடி ஓடி உதவி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்த அவர் இப்போது மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு உதவியை செய்திருக்கிறார் பாலா.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரை கதவு திறக்கும் என்ற விதிக்கு ஏற்பட பாலாவுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

பாலாவின் உதவிகள்: சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.
ஆம்புலன்ஸ்: அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள்.
உடைந்த விரல்கள்: சமீபத்தில்கூட சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட போது குடும்பத்துக்கு தலா 1000 ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாயை வழங்கினார். அதுவும் பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதற்கிடையே பாலாவுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது. கடந்த மாதம் அவரது கை விரல்கள் உடைந்துபோயின. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின. மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூற ஆரம்பித்தனர்.
மீண்டும் உதவி: விரல்கள் சரியானதை அடுத்து பாலா மீண்டும் உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதன்படி வாணியம்பாடி அருகே இருக்கும் நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸை வாங்கிக்கொடுத்தார். இந்நிலையில் பாலா மீண்டும் ஒரு உதவியை செய்திருக்கிறார். அதாவது நீலகண்டன் என்பவர் மாற்றுத்திறனாளி.
அவர் எம்சிஏ படித்திருக்கிறார். ஆனால் மூன்று சக்கர வாகனம் இல்லாமல் பணிக்கு செல்ல முடியாமல் தவித்திருக்கிறார். இதனை தெரிந்துகொண்ட பாலா உடனடியாக ஒரு மூன்று சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு நீலகண்டனின் வீட்டுக்கு சென்று வழங்கினார். அதற்கு நீலகண்டன் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இப்படியான உதவிகளை செய்யும் பாலாவுக்கு ரசிகர்கள் பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











