கதாநாயகனாகும் KPY பாலா.. நிஜ ஹீரோ இனி சினிமாவிலும் ஹீரோ.. நீங்க இல்லாம நான் இல்லைனு உருகுறாரே!
சென்னை: KPY பாலா குறித்து பலருக்கும் தெரியும் இன்னும் சொல்லப்போனால், தொலைக்காட்சி பார்க்கின்ற, தொலைக்காட்சி பார்க்காத மக்களுக்கு கூட அவரைத் தெரியும். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரது டைமிங் காமெடிக்கு பலரும் ரசிகர்கள். இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து, வானொலியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முத்திரை பதித்தவர்கள் பலர் உள்ளார்கள். மாதவன், சிவகார்த்திகேயன், துஷாரா விஜயன், ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன், ரமேஷ் திலக், ஆர்.ஜே. பாலாஜி என இந்த பட்டியல் தமிழ் சினிமாவில் நீண்டு கொண்டே போகும். இப்போது அந்த பட்டியலில் இணைய போகும் நபராக KPY பாலா மாற உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.
இவரது டைமிங் காமெடி பலர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனக்குள் நடனம், நகைச்சுவை, நடிப்பு என பல திறமைகளைக் கொண்டுள்ளவர் KPY பாலா. இவரிடத்தில் இயல்பாகவே ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை இருப்பதால் KPY பாலாவிடம் சென்று உதவி கேட்டல் அது எப்படியாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை நாடும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளார்கள். KPY பாலாவும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுக்கிறார்.

உதவிகள்: குறிப்பாக பல மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியில் இருந்து, பலர் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சுயதொழில் தொடங்க ஏதாவது உதவி செய்வது என அவரின் உதவிக்கரம் நீண்டு கொண்டே போகும். அவர் மக்களுக்கு உதவி செய்வதைப் பார்த்த சிலர், பாலவை அணுகி அவரிடத்தில் பணத்தையோ பொருளையோ கொடுத்து விட்டால், அதை அவர் ஏழைகள் இடத்தில் கொண்டு சேர்த்துவிடுவார் என பலரும் அவரிடத்தில் பணம் , பொருள் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் எண்ணம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகளைப் போல ஓடி ஓடி உதவி செய்வதைப் பார்த்த சிலர், அரசியலுக்கு வர போகிறீர்களா என்ற கேள்விக்கு, அந்த எண்ணமே நமக்கு கிடையாது" எனக் கூறியவர். இப்படி நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக இருக்கும் KPY பாலா இனி சினிமாவிலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

முதல் படம்: இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, எனது நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேற உள்ளது. நான் முதன் முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளேன். நீங்க இல்லாம நான் இல்லை. படத்தின் இயக்குநர் ஷெரிஃப், உடன் நடிக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர்கள் மெர்வின் மற்றும் விவேக், தயாரிப்பு நிறுவனமான ஆதிமூலம் புரடெக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் படத்தின் பெயர் என்ன எனவும் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











