கிருஷ்ணகிரி இளைஞர் ஹீரோ: காமெடியும் காதலும் கலந்த 'சைக்கிள் கம்பெனி'!
பொதுவாக வட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் ஹீரோவாக ஜொலிப்பது அரிது.
அந்தக் குறையைப் போக்க வந்திருக்கிறார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞர் ரீத்.
'சந்திரன் பிலிம்ஸ்' எனும் பட நிறுவனம் சார்பில் ஷ்யாம் பிரசாத் ரெட்டி, சிசி.செந்தில் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'சைக்கிள் கம்பெனி' என்ற படத்தில் அவர்தான் ஹீரோ.

லஷ்மிகா
இந்தப் படத்தின் நாயகியாக மலையாளப் படங்களில் நடித்து வரும் லஷ்மிகா அறிமுகமாகிறார். மற்றொரு கதாநாயகனாக மஞ்சுநாத்தும், மற்றொரு கதாநாயகியாக ரேகாஸ்ரீயும் அறிமுகமாகின்றனர்.இவர்களுடன் செல்லத்துரை, அம்பானி சங்கர், கோவை செந்தில், ரங்கம்மா பாட்டி,போண்டாமணி உள்பட பல புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர்தான் வில்லன்
தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷ்யாம் பிரசாத் ரெட்டிதான் இந்தப் படத்தில் பிரதான வில்லனாக அறிமுகமாகிறார். மணிவாசகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜே.கே.செல்வாஹ் இசையமைக்கிறார். படத்தொகுப்பை பன்னீர்செல்வம் கவனிக்கிறார். நடனத்தை ஜீவித் அமைக்கிறார்

மேலாநல்லூர் ஸ்ரீனிவாசன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் மேலாநல்லூர் ஸ்ரீனிவாசன். இவர் ஈ.ராமதாஸ், கோபி பீம்சிங் ,லேனா மூவேந்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். 700 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை
எழுதியுள்ளார். 20 க்கும் மேற்பட்ட பக்தி வீடியோ ஆல்பத்தை இயக்கியும் உள்ளார்

படத்தின் கதை
'சைக்கிள் கம்பெனி ' படம் பற்றி இயக்குநர் மேலாநல்லூர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், "மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பண்ணையார்களான பெரிய பங்காளி, சின்ன பங்காளி இருவரும் வைத்தது தான் சட்டம். அந்த கிராமத்து மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அந்த பங்காளிகளின் சட்டபடி அந்த ஊரில் யாரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி காதலிப்பது தெரிந்தால் காதலர்களை பஞ்சாயத்து முன் நிறுத்தி
காதலனுக்கு வேறொரு பெண்ணையும் ,காதலிக்கு வேறொரு ஆணையும் காதலர்கள் முன்னிலையிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

அது என்ன சைக்கிள் கம்பெனி?
இப்படிப்பட்ட சூழலில் பெரிய பங்காளியின் மகளும், சின்ன பங்காளியின் மகளும் அந்த ஊரில் படித்துவிட்டு சுயமாக சைக்கிள் கம்பெனி நடத்தும் இரண்டு இளைஞர்களை காதலிக்கிறார்கள். இந்நிலையில் அந்த ஊரில் ஒரு சம்பவம்
நிகழுகிறது.அதிலிருந்து அந்த கிராமத்து மக்களை சைக்கிள் கம்பெனி இளைஞர்கள் காப்பாற்றுகிறார்கள்.அந்த ஊரை காப்பாற்றிய அவர்களுடைய காதலை அந்த ஊர் மக்கள் காப்பாற்றினார்களா? என்பதுதான் படத்தோட கிளைமாக்ஸ்.

கிருஷ்ணகிரி பகுதியில் படப்பிடிப்பு
கிருஷ்ணகிரி,தருமபுரி,ஓசூர் பகுதிகளில் 35 நாட்களில் வசனகாட்சிகள் முழுவதையும் ஒரே ஷெட் யூலில் எடுத்து முடித்துள்ளோம்.பாடல் காட்சி களுக்காக வெளிநாடு எதுவும் போகவில்லை. கதை நடக்கும் பகுதிகளிலேயே
படமாக்கவிருக்கிறோம்.
படத்தில் சின்னதாக ஒரு மெசேஜ் இருந்தாலும் முழுக்க காமெடி கலந்த காதல் கதையாக இருக்கும்.இரண்டு மணி நேரம் ரசித்து சிரித்து விட்டு வரலாம்!" என்றார்.


Click it and Unblock the Notifications