'கொரோனா பாதிப்பு உண்மைதான்.. அதுல கவலைப்பட ஒண்ணுமில்லை..' பிரபல நடிகை தகவல்!
மும்பை: தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை பிரபல நடிகை உறுதிப்படுத்தி உள்ளார்.
பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனான். இவர் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
இவர், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக, நேனொக்கடேன் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

ஆதிபுருஷ் சீதை
பின்னர் இந்தியில் ஹீரோபன்டி, ஷாருக்கானின் தில்வாலே, அர்ஜுன் பாட்டியாலா, ஹவுஸ்புல் 4, பானிபட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது மிமி என்ற படத்தில் வாடகைத் தாயாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக இவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனிமை சிகிச்சை
கடந்த சில நாட்களுக்கு முன், ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், ஷெட்யூல் முடிந்துவிட்டதாக கூறியிருந்தார். அதை முடித்துவிட்டு சண்டிகரில் இருந்து மும்பை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உண்மைதான்
இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அதுபற்றி அவர் ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

கவலைப்பட ஏதுமில்லை
'கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். மருத்துவர்கள் ஆலோசனைப்படி என்னை நானே தனிமைப்படுத்தி இருக்கிறேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு எனது வேலையை மீண்டும் தொடங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

வருண் தாவன்
கொரோனாவால் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். சமீபத்தில், ஜக் ஜக் ஜீயோ பட ஷூட்டிங்கில் பங்கேற்ற வருண் தாவன், நீது கபூர், இயக்குனர் ராஜ்மேத்தா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் தனிமை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா நட்சத்திரங்கள்
முன்னதாக, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, விஷால், ராஜமவுலி, தமன்னா, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், டாக்டர் ராஜசேகர், சிரஞ்சீவி உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.


Click it and Unblock the Notifications











