‘அந்த காலத்து’ காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள்...ஜாலியான அலசல்
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன், சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஏப்.28 வெளியானது இது முக்கோண காதல் படம் ஆகும். இதேப்போன்ற கதைக்களம் கொண்ட படங்கள் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களே நடித்துள்ளனர். அது குறித்து பார்ப்போம்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரையும் காதலிக்கும் விஜய் சேதுபதி அவர்களிடம் சிக்கி தவிப்பதை நகைச்சுவையாக எடுத்துள்ளனர். இந்தப்படத்தில் நயன்தாராவை விட சமந்தா அழகாக இருப்பதாகவும், நயனின் கவர்ச்சி காலம் முடிகிறது என்கிற டாக் ஓடுவது தனிக்கதை.

ஒன்ஸ் அபான் எ டைம் காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள்
இங்கு நாம் சொல்ல வருவது காத்துவாக்குல ரெண்டுக்காதல் கதைக்களம் திரையுகிற்கு புதிதல்ல, இதற்கு முன்னர் பல படங்கள் வந்துள்ளன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, சிவக்குமார், ரஜினி, கமல், மோகன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். பல அற்புதமான கதையம்சத்துடன் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சில படங்கள் நகைச்சுவையாகவும், சில படங்கள் விழிப்புணர்வு போன்றும் எடுக்கப்பட்டுள்ளன.

பெண்களும் சிக்கிய படங்கள்
இதில் கதாநாயகர்கள் மட்டுமல்ல கதாநாயகிகளும் முக்கோண காதலில் சிக்கி தவிக்கும் படங்களும் வெளி வந்துள்ளன. அந்தக்கால தேவிகா தொடங்கி இடைக்கால தேவயானி வரை படங்கள் வந்துள்ளது. முதலில் கதாநாயகர்கள் படங்களை பார்த்துவிட்டு கதாநாயகிகளின் முக்கோண காதல் கதைக்கு வருவோம்.

சிவாஜியின் முக்கோண காதல் படங்கள்
முக்கோணக்காதலில் முதலில் நிற்பவர் சிவாஜி கணேசன் தான் அவர் நடித்த முக்கோண காதல் படங்கள் நன்றாக ஓடியது. சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா நடித்த இருமலர்கள் படத்தில் காதலி பத்மினி சொந்த ஊருக்குச் சென்றவர் திரும்பி வராததால் அப்பாவின் கட்டளைப்படி வேறு வழியில்லாமல் அத்தை மகள் கே.ஆர்.விஜயாவை மணப்பார். ஒரு பெண் குழந்தை சந்தோஷமாக செல்லும் வாழ்க்கையில் மகளின் டீச்சராக மீண்டும் காதலி பத்மினியை பார்ப்பார், அதன் பின்னர் படம் சுவாரஸ்யமாக நகரும்.

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
தேனும் பாலும் படத்திலும் இதேபோல் மனைவி பத்மினி காதலி சரோஜா தேவி இடையே மாட்டிக்கொண்டு நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு என சிவாஜி பாடுவார். படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக நகரும். மனைவியே காதலியிடம் பாசம் காட்டுவதும், சிவாஜியின் அலுவலகத்திலேயே வேலை கொடுக்கச் சொல்லி சொல்வதும் நடக்கும்.

எங்கே நிம்மதி...புதிய பறவை
அடுத்தப்படம் புதிய பறவை. ஆங்கிலப்படத்தின் தழுவல் இந்தப்படம். மனைவியை ஏதோ ஒரு கோபத்தில் அடிக்க அவர் இறந்துவிடுவார். இடையில் சரோஜாதேவியை சந்திக்கும் சிவாஜி அவரிடம் காதலில் விழுவார் எல்லாம் சந்தோஷமாக செல்லும் நேரம் இறந்துப்போன மனைவி உயிருடன் வந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ"-ன்னு பாடுவார். படத்தில் ஒருபக்கம் காதலி மறுபக்கம் மனைவி சௌகார் ஜானகின்னு "எங்கே நிம்மதி"-ன்னு சிவாஜி கதறுவார். படம் வித்தியாசமாக முடியும்.

முக்கோண காதல் மன்னன் ஜெமினி
சிவாஜிக்கு அடுத்து முக்கோண காதலின் நாயகன் என்றால் ஜெமினி கணேசன் தான், களத்தூர் கண்ணம்மா, பாதகாணிக்கை என அவருக்காக இரண்டு பெண்கள் உருகி "உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே"-ன்னு பாடுவார்கள். 1970 களில் ஜெமினி, சௌகார் ஜானகி, ஜெயந்தி நடிப்பில் வெளிவந்த இருகோடுகள் சிறப்பான படம். காதலி சௌகார் ஜானகியை மணக்க, அம்மாவின் கொடூர மனதால் சௌகார் ஜானகி பிரிவார். பின்னர் அம்மாவுக்காக ஜெயந்தியை மணந்து அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருப்பார் ஜெமினி அங்கு மாவட்ட ஆட்சியராக முதல் மனைவி ஜானகி வருவார். கணவன் தனக்கே சொந்தம் என "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" என பாடும் பாடல் அற்புதமாக இருக்கும்.

எம்ஜிஆர் பட முக்கோண காதல்
எம்ஜிஆர் கால முக்கோணக்காதல் வித்தியாசமானதாக இருக்கும். எம்ஜிஆர் படத்தில் பல படங்களில் 2 பெண்கள் எம்ஜிஆரை விரும்புவார்கள் ஆனால் எம்ஜிஆர் ஒருவரை மட்டுமே விரும்புவார். அடுத்தவரை தங்கச்சின்னு சொல்லிடுவார். தொழிலாளி தொடங்கி பல படங்களில் இதை பார்க்கலாம். நான் ஏன் பிறந்தேன் படத்தில் இதேப்போன்றதொரு வேடம் எம்ஜிஆருக்கு திருமணமாகி மனைவி கே.ஆர்.விஜயா இருந்தும் சொல்ல முடியாத நிலை, வேலைக்கொடுத்த காஞ்சனா விரும்புவார், கடைசியில் என்ன? தங்கச்சிதான் முடிவு.

தங்கச்சி கேரக்டர் தான் கடைசியில்
கண்ணன் என் காதலன் படத்தில் எம்ஜிஆரை விரும்பும் அத்தைப் பெண் வில்லியாக கடைசியில் மாறுவார். காதலி ஜெயலலிதாவை கரம் பிடிப்பார். உலகம் சுற்றும் வாலிபன் இன்னும் வித்தியாசம் தாய்லாந்து பெண் டூயட் பாடி (கனவில்தான்) முடிந்தப்பின் அவரை தங்கச்சின்னு சொல்லிவிடுவார். ஆனால் சந்திரகலாவுடன் தன்னை விரும்பிய லதாவையும் அண்ணன் எம்ஜிஆர் மனைவி மஞ்சுளா வற்புறுத்தலால் ஏற்றுக்கொள்வார்.

ரஜினியின் முக்கோண காதல்
ரஜினி நடித்த வீரா படத்திலும் சூழ்நிலை காரணமாக ரோஜாவை மணக்க இறந்துபோனதாக நினைத்த மனைவி உயிருடன் வர காமெடியாக கதை நகரும். இரண்டு மனைவிகளும் நட்பானவுடன் இன்னும் சிக்கலில் மாட்டிக்கொள்வார் ரஜினி. இதேபோல் மன்னன் படத்தில் குஷ்புவை காதலிப்பார், அம்மாவுக்காக விஜயசாந்தியை மணப்பார், எங்கேயோ கேட்டக்குரல் படத்தில் பிரிந்துச் சென்ற மனைவி ஞாபகமாக அவரது தங்கை ராதா விரும்பியும் ஏற்க மறுப்பார்.

அற்புதமான சிவகுமார் படம் பத்ரகாளி
இதேபோல் சிவகுமார் படங்களில் பல படங்கள் உண்டு. அதில் ஒன்று பத்ரகாளி படம், இப்படத்தில் முதல் மனைவி, குழந்தை இறந்ததால் மன நலன் பாதிக்கப்பட இரண்டாவது திருமணம் செய்த பின்னர் முதல் மனைவி நிலை சரியாக சிவகுமார் தவிக்கும் தவிப்பு நன்றாக இருக்கும். இப்படத்தின் பாடல்களும் முதல் மனைவிக்கும் சிவகுமாருக்கும் இருக்கும் நெருக்கத்தை உணர்த்த "கண்ணன் ஒரு கைக்குழந்தை", "வாங்கோன்னா" பாடலும் அந்த காலத்தில் பிரபலம்.

சிந்துபைரவி
அடுத்து பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த சிந்து பைரவி படத்தில் பிரபல பாடகரான சிவகுமார், தன்னை சவாலுக்கு அழைக்கும் சுஹாசினி மீது காதல் வர தனது மனைவியை விட்டு சுஹாசினியை காதலிக்க அதனால் தொழிலை மறந்து மதுபோதைக்கு அடிமையாகி சீரழிவார். "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னு குட்டி நான்", "பாடறியேன் படிப்பறியேன்" பாடல்கள் இப்படத்தில் பிரபலம்.

காதல் இளவரசனின் முக்கோண காதல்
கமல்ஹாசன் நடித்த மீண்டும் கோகிலாவில் நாலணா வக்கீல் கமலுக்கு, நடிகை தீபா கிளையண்ட் கிடைக்க மனைவி ஸ்ரீதேவியை மறந்து நடிகை தீபா பின்னால் சுற்றுவார். படம் முழுவதும் கமலின் தடுமாற்றமும் ஸ்ரீதேயின் நடிப்பும் பிரபலம். பெண் பார்க்கும் படலத்தில் கமல், ஸ்ரீதேவி பாடும் பாடல் பிரபலம்.

மைக் மோகனின் முக்கோண காதல்
அடுத்த காதல் மன்னன் மைக் மோகன் இதுபோன்ற பல முக்கோண காதல் படங்களில் நடித்துள்ளார். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் கிராமிய பெண் சுஹாசினியை மணந்து நடுத்தெருவில் விட்டுவிட்டு காதலி ராதாவை மணந்து அவருடன் வாழ்வார். ஒருநாள் ராதா சுஹாசினியை கூட்டி வந்து வேலைக்காரியாக வீட்டில் வைத்திருப்பார். மோகன் இடையில் மாட்டிக்கொண்டு தடுமாறுவார். ரெட்டைவால் குருவி எனும் படத்திலும் இதேப்போன்று ராதிகா, அர்ச்சனா இருவரையும் மணந்து சமாளிக்கும் பாத்திரம் மோகனுக்கு.

தேவிகா காலத்து முக்கோண காதல், எங்கிருந்தாலும் வாழ்க...
இது போன்று ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் நடப்பதுபோன்ற கதைகளும் உண்டு. அதில் ஒன்று நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா கல்யாண்குமாரை காதலிக்க ஊருக்குச் சென்ற தேவிகாவை முத்துராமனுக்கு கட்டிவைத்துவிடுவார்கள். காதலி வராத ஏக்கத்தில் காதலன் டாக்டர் கல்யாணகுமார், எங்கிருந்தாலும் வாழ்க"-ன்னு பாடிமுடிப்பார், கணவரை நோயாளியாக சிகிச்சைக்கு அழைத்து வந்து நிற்பார் தேவிகா. மனைவியின் காதலை அறிந்து முத்துராமன் கல்யாண்குமாருடன் சேர்த்து வைக்க முயல்வார். கணவர் நோயாளி முத்துராமன், முன்னாள் காதலன் மருத்துவர் கல்யாண் குமார் இடையே சிக்கி தவிப்பார் தேவிகா.
Recommended Video

பார்த்திபனின் அட்ராசிட்டியை பேசும் சொர்ணமுகி
இதேப்போன்று மற்றொரு படம்ன்று தேவயானி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் நடித்த சொர்ணமுகி. இப்படத்தில் பிரிந்துபோன காதலன் ஜெயிலுக்கு போக, காதலன் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் பேங்க் மேனேஜர் பிரகாஷ் ராஜை காதலித்து மணக்கும் நேரத்தில் பார்த்திபன் திரும்ப தேவயானி பார்த்திபனா?, பிரகாஷ்ராஜா? என தடுமாறுவார். பார்த்திபன் கொடூரமாக நடக்க ஒரு கட்டத்தில் தேவயானியே வெறுத்து ஒதுக்கி ஜெயிலுக்கு அனுப்புவார். ஜெயில் பார்த்திபன் தான் ஏன் அவ்வாறு நடந்தேன் என விளக்குவதுதான் படத்தின் ட்விஸ்ட்.

சூர்யாவின் சில்லுனு ஒரு காதல்
இதுபோன்ற சூர்யாவின் சில்லுனு ஒரு காதல், ரஹ்மானின் புதுபுது அர்த்தங்கள் என பல கதைகள் உணர்ச்சி பெருக்குடனும், நகைச்சுவையாகவும், சிறப்பான காட்சி அமைப்புகளுடனும் எடுக்கப்பட்டு மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. சொன்னது சில படங்கள், சொல்லாமல் விடுபட்டது பல படங்கள். தற்போது வந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இரண்டாம் வகை ஆகும். நகைச்சுவையுடன் முக்கோணக்காதலை அணுகியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











