கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ சுதீப்
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அடுத்ததாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சுதீப். இந்த வெற்றியை அடுத்து தமிழில் பிரம்மாண்டமான இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம்கோபால் வர்மா ஆகிய பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களில் நடித்து வெளி மாநில ரசிகர்களிடமும் பிரபலமான சுதீப்பிற்கு நேரடி தமிழ் படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. அதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கன்னடப்படம்தான்
சுதீப் - கே.எஸ். ரவிக்குமார் இணைவது தமிழ்படமல்ல கன்னடப் படம்தான். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. சூரப்பபாபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்தியைத் தொடர்ந்து கன்னடம்
தமிழின் சாமி படத்தை இந்தியில் போலீஸ்கிரி என்ற பெயரில் ரீமேக் செய்தார் கே.எஸ். ரவிக்குமார். அதில் போலீசாக நடித்தவர் சஞ்சய் தத். இந்திக்கு அடுத்த படியாக கன்னடப்படத்தை இயக்க உள்ளார்.

பிரபலங்களின் இயக்குநர்
கே.எஸ். ரவிக்குமார் ஏற்கனவே ரஜினியின் படையப்பா, கமலின் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சரத்குமாரை வைத்து இயக்கிய நாட்டாமைதான் அவரை பிரபலப்படுத்தியது.

ரஜினியை இயக்கும் ரவிக்குமார்
ரஜினி நடிக்கும் ராணா படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்க இருந்தார் அதற்கான பூஜைகளும் போடப்பட்டன. ரஜினிக்கு உடல்நலமில்லாமல் போனதால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினியின் கோச்சடையான் படத்தின் மேற்பார்வையாளராக கே.எஸ். ரவிக்குமார் பணிபுரிகிறார். அந்த வேலைகளை முடித்துக் கொண்டு சுதீப் நடிக்கும் படத்தை அவர் இயக்குவார்.

சிங்கம் நடிகர்
சுதீப் ஏற்கனவே சூர்யா நடித்த சிங்கம் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர். இப்போது சிங்கம் 2 ரீமேக்கிலும் அவரே நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இப்போது அவர் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு கே.எஸ். ரவிக்குமாருடன் இணைகிறார்.


Click it and Unblock the Notifications











