Kuberaa Cheyyaru Balu Review: குபேரா செய்யாறு பாலு விமர்சனம்.. ஒரே இழுவை.. நாங்கள் பாவமில்லையா!
சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் குபேரா. குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இந்தியாவின் பெரும் கோடீஸ்வரன் கடலில் எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்தியாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் எண்ணெய் கொடுக்கும். அதை வெளியே கொண்டு வர அரசாங்க மந்திரியுடன் டீல் பேசப்படுகிறது. இதற்காக ரூபாய் ஒரு லட்சம் கோடி கை மாற்றப்படுகிறது. அதில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் 50 ஆயிரம் கோடி வெள்ளைப் பணமாகவும் கை மாற்றப்படுகிறது. இந்த பணத்தை கைமாற்றும் அதிகாரியாக முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனா உள்ளார்.
கருப்பு பணத்தை மாற்றும் போது பினாமிகளாக பிச்சைக்காரர்கள் வேண்டும் என நாகர்ஜுனா கூறுகிறார். அதன் பின்னர் திருப்பதியில் இருந்து மும்பைக்கு செல்லும் தனுஷ் குபேரானாக மாறினாரா இல்லையா என்பதுதான் கதை. நடிப்பு அசுரன் தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். சி.பி.ஐ அதிகாரியாக வரும் நாகர்ஜுனாவும் சைலண்ட்டாக சிறப்பாக நடித்துள்ளார். பிச்சைக்காரராக இருக்கும் தனுஷ் வங்கிக் கணக்கில் எப்படி பல்லாயிரம் கோடி பணம் செலுத்தப்படுகிறது என்பதற்கு சேகர் கம்முலா தனது திரைக்கதையில் சிறப்பாக உழைத்துள்ளார்.

லாஜிக் மிஸ்டேக்ஸ்: படத்தின் முதல் பாதி முழுவதும் கடகடவென போய் கொண்டு உள்ளது. கடலில் கிடைத்த எண்ணெயை எப்படி அரசாங்கத்தை ஏமாற்றுவது, பணத்தை எப்படி கை மாற்றுவது, அதற்கு பிச்சைகாரர்களை எப்படி பயன்படுத்துவது என முதல் பாதி படம் வேகமாக நகர்கிறது. இது போன்ற படத்தை எல்லாம் இரண்டை கால் மணி நேரத்தில் முடிக்க வேண்டும். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கதை வளையுது போகுது வளையுது. இரண்டாம் பாகம் முழுவதும் தனுஷ் மட்டும் தான் உள்ளார். இதில் லாஜிக் எங்கே என்று கேட்டால், அது குறித்து எல்லாம் எதுவுமே கேட்கக்கூடாது. இஷ்டம் இருந்தால் படம் பாரு, இல்லையென்றால் கிளம்பு என்பதைப்போல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். இந்த படத்தில் கிளைமேக்ஸில் வைத்திருந்த காட்சிகளை எல்லாம் நம்பலாமா வேண்டாமா என்ற எண்ணம் உள்ளது.
தனுஷ் மட்டும் இல்லையினா: இவை எல்லாவற்றையும் மீறி படத்தை ஒற்றை மனிதராக தனுஷ் உள்ளார். படத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் ஒட்டவில்லை. சில காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாமலே ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் எப்பா போதும் முடிங்க என்பது போல உள்ளது. படத்தில் ராஷ்மிகாவும் தனுஷும் பேசிக் கொள்வார்கள், ஓடிக் கொண்டே இருக்கிறோம் எதற்கு என வரும். அதேபோலத்தான் ரசிகர்களும் படத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் எதற்கு எனத் தெரியாமல் பார்த்துக் கொண்டே உள்ளார்கள்.

டெக்னிக்கலாக: முதல் பாதியில் சிறப்பாக கொண்டு போன கதையை இரண்டாம் பாதியில் சிறப்பான 4,5 காட்சிகள் வைத்து முடித்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது பல காட்சிகள் தனுஷிடம் இருந்து நடிப்பை வாங்க வேண்டும் என காட்சிகளை வைத்துள்ளாரா என்ற கேள்வி வருகிறது. படம் டெக்னிக்கலாக மிகவும் சிறப்பாக உள்ளது. பல காட்சிகளில் காட்சிக்கு காட்சி கலர் டோன் நன்றாக உள்ளது. தேவிஸ்ரீ பிரசாத்தை கட்டிப்போட்டு வேலை வாங்கி உள்ளார்கள் என்று நினைக்கிறேன். தனுஷ் தான் மைய நாயகன், அவரை மீறி ஸ்கோர் செய்வது நாகர்ஜுனா" என தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











