ரவுடியோடு மணிகண்டன் போட்ட சண்டை.. வடபழனியில் நடந்த அடிதடி சம்பவம்.. போலீஸ் என்ன செய்தது தெரியுமா?
சென்னை: நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகின்ற நடிகராக உள்ளார். இதுவரை இவர் நடித்த படங்களில் தனது நடிப்பின் மூலம் பாராட்டுகளைக் குவித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், கதாநாயகனோ, துணை கதாபாத்திரமோ என எந்த கதையில் நடித்தாலும் படத்தின் கதை தரமானதாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கின்றார். அப்படி இருக்கும் திறமையான கலைஞன் ரோட்டில் ஒரு ரவுடியுடன் சண்டை போட்டுள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா? அது குறித்து அவரே தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர், வசன கர்த்தா, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என தனது திறமைகள் மூலம் தொடந்து மிளிர்ந்து கொண்டு இருப்பவர் மணிகண்டன். இவர் இயக்கிய நரை எழுதும் சுயசரிதம் தொடங்கி இவர் நடித்த சில்லுக் கருப்பட்டி, காலா, ஜெய் பீம், குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் வரை இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே பெரும் ஹிட் படங்களாக மாறியுள்ளது. தற்போது ரிலீஸ் ஆகியுள்ள குடும்பஸ்தன் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.

மணிகண்டன் திரைத்துறையில் படிப்படியாக தன்னை நிறுவிக் கொண்டவர். தனக்குள் இருந்த திறமையையும் ஆர்வத்தையும் மேலும் மேலும் அதிகரிக்கச் செய்ய சினிமாவில் கடுமையாக உழைத்தவர். நடிகரும் மணிகண்டனின் நண்பருமான ரமேஷ் திலக் மணிகண்டன் குறித்து பேசும்போது, ' மணி ஒரு படத்துக்குள்ள வந்துட்டா, அந்தப் படத்துல கவலையே இல்லாம நடிக்கலாம். படம் ஹிட் ஆகிடும். காரணம் மக்களுக்கு மிகவும் நெருக்கமான கதைகளை தான் மணி தேர்வு செய்வார்' என தெரிவித்திருந்தார்.
இப்படியான மணிகண்டன், தந்து குடும்பஸ்தன் படத்தின் புரோமோசனின்போது, தான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் வடபழனியில் ஒரு ரவுடியோடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒருநாள் வடபழனியில் சாலை ஓரமாக நடந்து போய்க்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் என்மீது வந்து பைக்கை மோதினார். எனக்கு கோபம் வந்து திட்டிவிட்டேன். உடனே அவர் என்னிடம் சண்டைக்கு வந்துவிட்டார்.

அடிதடி: இருவரும் ரோட்டில் அடித்துக் கொள்கின்றோம். கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டு இருக்கும்போது போலீஸ் அங்கு வந்தது. போலீஸைப் பார்த்ததும் சண்டையை நிறுத்திவிட்டு எழுந்து நின்றோம். எனது தலையெல்லாம் ஒரே குப்பையா இருக்கு. போலீஸ் கேட்டது, என்மீது பைக்கை ஏற்றிய நபர், என்னை அவரது நண்பன் எனக் கூறிவிட்டார். நான் உடனே இல்லை எனக் கூறி, நடந்ததைச் சொன்னேன். உடனே போலீஸ், என்னை திட்டி அனுப்பிவிட்டார்கள். இதுமட்டும் இல்லாமல், என் மீது பைக்கை விட்டவர் தோள்மீது கை போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.
ரவுடி: நான் நடந்து வடபழனி பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துவிட்டேன். அப்போது என்மீது பைக்கை விட்ட நபரும் அவருடன் நான்கைந்து பேரும் வந்தார்கள். என்னைக் கூப்பிட்டு, ' சாரிடா நான் கொஞ்சம் டென்சனாக இருந்துவிட்டேன், அதான் சண்டை போட்டுவிட்டேன்' எனக் கூறினார். நான் அவர்மீதுதான் தவறு எனக் கூறிவிட்டு, அங்கிருந்து வந்துவிட்டேன். அவர் போன பின்னர்தான் அவர் குறித்து விசாரித்தேன். அவர் அந்த ஏரியாவில் பெரிய ரவுடி எனத் தெரியவந்தது. எனக்கு கை கால் எல்லாம் நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்" எனக் கூறினார்.



Click it and Unblock the Notifications











