Manikandan: கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மணிகண்டன்.. உதவி இயக்குநரிடம் பட்ட அவமானம்!
சென்னை: நடிகர் மணிகண்டன், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரை நடிகர் என்ற வட்டத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. இவர் தனது தெளிவான சினிமா அறிவினால், படங்களுக்கு வசனங்கள் எழுதுவது, டப்பிங் கொடுப்பது, படங்களின் திரைக்கதை எழுதுவது, இயக்குவது என மணிகண்டன் ஒரு சினிமாகாரராக தன்னை கூடுமானவரை வெளிப்படுத்திக் கொண்டு உள்ளார். இப்படியான நிலையில் மணிகண்டன் தான் சினிமாவில் நடிக்க, முயற்சி செய்து கொண்டு இருந்த காலகட்டத்தில் மிகவும் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரே பேசியுள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
குட் நைட் படத்திற்கு முன்னர் மணிகண்டன் பல படங்களில் நடித்திருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகர்கள் நடிப்பில் உருவான படம் என்பதால், மணிகண்டன் மக்கள் மத்தியில் பெரும் அளவுக்கு ரீச் ஆகவில்லை. ஜெய் பீம் படத்தில் சூர்யாவை விடவும் இவரது நடிப்பு தான் அட்டகாசமாக இருந்தது என விமர்சகர்கள் பலரும் கூறினாலும், சூர்யா இருந்ததால், சூர்யாவின் நடிப்பு தான் பெரும் கவனத்தை ரசிகர்கள் மத்தியில் ஈர்த்தது. ஆனாலும், தனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் கௌரவத்திற்கு மணிகண்டன் தகுதியானவர் என சூர்யா தெரிவித்தார்.

இப்படியான நிலையில், மணிகண்டனின் நடிப்பில் வெளியாகி கடந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் குட் நைட். இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் மணிகண்டனுக்கு தனி வரவேற்பு இருந்தது. மேலும் கடந்த ஆண்டே வெளியான மற்றொரு படமான லவ்வர் படத்தின் மூலமும் மணிகண்டனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் மணிகண்டன் நடிக்கின்றார் என்றால், அந்தப் படத்தை கட்டாயம் பார்க்கலாம், அவரது கதைத்தேர்வு எதார்த்திற்கு மிக அருகில் இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையும் அவர் உருவாக்கியுள்ளார்.
மணிகண்டன்: இப்படியான நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் மணிகண்டன் நடிப்பில் வெளியான படம், குடும்பஸ்தன். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாக மாறியது. படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது. மணிகண்டன் தற்போது சினிமாவில் பலரும் கவனிக்கும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் அவரது ஆரம்ப காலகட்டத்தில் பெரும் அவமானங்களைச் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.

அவமானம்: அதாவது, ஒரு முறை நடிக்க ஒரு செட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த உதவி இயக்குநர்கள் மணிகண்டனுக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து அதற்கான காஸ்ட்யூமும் கொடுத்துள்ளார்கள். இப்படியான நிலையில் அங்கு வந்த மற்றொரு சீனியர் உதவி இயக்குநர், மணிகண்டனைப் பார்த்து, யாருடா இவன், இவனுக்கு யாருடா இந்த காஸ்ட்யூம் கொடுத்தது? இவன் மூஞ்சியை பார்த்தியா எனக் கூறி மிகவும் கேவலமாக மணிகண்டனின் தோற்றம் குறித்து பேசியுள்ளார். இதனால், மணிகண்டன் தான் அணிந்திருந்த காஸ்ட்யூமை கழற்றிக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஷாக்: அங்கு இருந்து வெளியே வந்த மணிகண்டன், தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீரோடு அங்கிருந்து வெளியே வந்தவரை, பார்த்த சிலர் என்ன ஆச்சு? ஏன் அழுகுற தம்பி என கேட்டுள்ளனர். ஆனால் மணிகண்டன் அவர்கள் யாருக்குமே பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக மணிகண்டன் வெளியே சொன்ன பின்னர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











