குமரிமுத்து டு அர்ஜுன் தாஸ்.. வித்தியாசமான குரல் வளத்தால் கோலிவுட்டில் பாப்புலரான பிரபலங்கள்!
சென்னை: ஹேண்ட்ஸம் ஆன லுக், திறமையான நடிப்பு, நடன திறமை என ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்குள் இருக்கும் தனித் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளனர்.
Recommended Video
படங்களில் பாட்டுப் பாடுவது போல நடித்தே மைக் மோகன் என்ற பட்டப்பெயர் கொண்டு பல வெள்ளி விழா படங்களை நடிகர் மோகன் கொடுத்திருந்தார்.
அதே போல, தங்களின் வித்தியாசமான குரல் வளத்தால் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலருண்டு, அதில் ஒரு சிலர் பற்றி இங்கே பார்ப்போம்.

குமரி முத்து
80களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் குமரிமுத்து தனது வித்தியாசமான குரல் வளத்தாலும், கள்ளம் கபடமற்ற சத்தம் போட்டு சிரிக்கும் தன்மையினாலும் வெகுவாக தமிழ் ரசிகர்கள் மனங்களில் பதிந்தார். 2009ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது நம்ம ஆளு படத்தில் பாக்கியராஜின் தந்தையாக சிறப்பாக நடித்திருப்பார். கடைசியாக விஜய்யின் வில்லு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் சீனிவாசன்
1965ம் ஆண்டு வெளியான ஒரு விரல் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தேங்காய் சீனிவாசன். தேங்காய் வியாபாரியாக நாடகங்களில் நடித்து பிரபலமானதால் தேங்காய் சீனிவாசன் என்றே தமிழ் சினிமாவிலும் அறியப்பட்டார். காமெடி நடிகர், குணசித்ர நடிகர், வில்லன் நடிகர் என பல ரோல்களில் நடித்திருந்தாலும், பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படம் என்றென்றும் அவரது நினைவை தமிழ் ரசிகர்களிடம் நிலைத்திருக்கச் செய்யும்.

வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மூர்த்தி, அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெண்ணிற ஆடை மூர்த்தியாகவே அறியப்பட்டார். காமெடி நடிகர், கதையாசிரியர் என பல பரிமாணங்களில் கலக்கியவர். "பக் பக்" என வித்தியாசமான ஒலி எழுப்பி பேசும் திறன் கொண்டே தமிழ் சினிமா ரசிகர்களை வெகு காலம் சிரிக்க வைத்தவர். டபுள் மீனிங் வசனங்களுக்கும் புகழ்பெற்றவர்.

மார்க் ஆண்டனி
மிமிக்ரி செய்ய பழகுபவர்கள் நிச்சயமாக இவரது குரலை மிமிக்ரி செய்ய பழகாமல் அந்த கலையை தொடங்கவே மாட்டார்கள். அப்படியொரு யூனிக்கான வாய்ஸ் கொண்டவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாக அறிமுகமான ரகுவரன், வில்லன் நடிகராக பிரபலமாக அறியப்பட்டார். பாட்ஷா மார்க் ஆண்டனி, முதல்வன் அரங்கநாதரை யாருமே மறக்க மாட்டார்கள்.

வைகைப்புயல்
எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும், சோன முத்தா போச்சா, கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை, தம்பி டீ இன்னும் வரலை. நாய் சேகர், நாய் சேகர், அதுக்கு ஏன் பா இத்தனை தடவை திரும்புற என பல படங்களில் தனது வசீகரமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் நம்ம கான்ட்ராக்டர் நேசமணி வடிவேலும் குரலும் மாயாஜாலம் தான்.

கைதி வில்லன்
அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார் நம்ம மாஸ்டர் நடிகர், கைதி வில்லன் அந்தகாரம் படத்தின் ஹீரோ அர்ஜுன் தாஸ். இவரை மாதிரி பேசுறவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனது பேஸ் வாய்ஸால் தமிழ் சினிமா ரசிகர்களை சமீப காலமாக ஈர்த்து வரும் அர்ஜுன் தாஸும் மாயக் குரலோனே!


Click it and Unblock the Notifications











