Kutrap Parambarai: சசிகுமார் - சத்யராஜ் கூட்டணியில் தரமான சம்பவம்... ஏமாற்றத்தில் பாரதிராஜா, பாலா!
சென்னை: சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். முதல் படத்திலேயே மதுரைகாரன் சம்பவம் செய்த சசிகுமார், அடுத்தடுத்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள அவர், இந்த முறை மிரட்டலான கதையை இயக்கவுள்ளாராம்.
சசிகுமார் இயக்கத்தில் சத்யராஜ்
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் சுப்ரமணியபுரம். 2008ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. சசிகுமார் இயக்கத்தில் ஜெய்யுடன் அவரும் லீடிங் ரோலில் நடித்திருந்தார். மதுரையை பின்னணியாக வைத்து ரத்தமும் சதையுமாக அம்மண்ணின் வாழ்வியலை பதிவு செய்திருந்தார்.

சுப்ரமணியபுரம் படம் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் வெற்றிப் பெற்றது. அதனையடுத்து சசிகுமார் இயக்கிய ஈசன் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் சில படங்களை தயாரித்த சசிகுமார், ஒருகட்டத்தில் முழுநேர நடிகராகிவிட்டார். ரஜினியுடன் பேட்ட, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் இயக்குநராகும் முடிவில் இருக்கிறார் சசிகுமார். இந்த முறை படமாக இல்லாமல் வெப் சீரிஸ் இயக்கவுள்ளாராம். சமீப காலங்களில் ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. அதனால் சசிகுமாரும் அதே ரூட்டில் செல்லவிருக்கிறார். அதன்படி, அவர் குற்றப் பரம்பரை என்ற நாவலை வெப் சீரிஸ்ஸாக இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவல் ரொம்பவே பிரபலமானது. இது இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது அவர்களால் இயற்றப்பட்ட குற்றப் பரம்பரை சட்டம் குறித்தும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பற்றியும் பேசும் நாவலாகும். வாசகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என இயக்குநர்கள் பாரதிராஜாவும் பாலாவும் போட்டிப் போட்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் பாரதிராஜா, பாலா இடையே மோதலும் உருவானது. ஆனாலும் இன்னும் இந்தப் படம் பற்றிய முடிவு வெளியாகவில்லை. இதனால் சசிகுமார் வெப் சீரிஸ்ஸாக எடுக்க களமிறங்கிவிட்டார். அதன்படி சத்யராஜ் லீடிங் ரோலில் நடிக்கும் குற்றப் பரம்பரை வெப் சீரிஸ் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. ஜனவரியில் இருந்து தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என சசிகுமார் தெரிவித்துள்ளார். இதனை பிரபல ஓடிடி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











