தமிழைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்குச் செல்கிறது பிரம்மாவின் "குற்றம் கடிதல்"
தமிழில் நாளை வெளியாகவிருக்கும் குற்றம் கடிதல் திரைப்படம் விரைவில் ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
காக்கா முட்டை திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் வெளிவந்திருக்கும் மற்றொரு சிறந்த படம் என்று குற்றம் கடிதல், திரைப்படத்தைத் தாராளமாகச் சொல்லலாம்.
ஆசிரியர் - மாணவர்களை மையக்கருவாக அமைத்து படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா. பிரம்மா என்று பெயர் வைத்திருப்பதால் தானோ என்னவோ படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

குற்றம் கடிதல் அர்த்தம் என்ன
‘குற்றம் கடிதல்' என்பதில் கடிதல் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு. ஒன்று, தவிர்த்தல். இரண்டாவது, கடிந்துகொள்ளுதல் அல்லது தண்டித்தல். ஒரு ஆசிரியர் மாணவரை கடிந்து கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை எந்தவித ரசாயனமும் கலக்காமல், செயற்கை வர்ணங்கள் பூசாமல் இயற்கையாக அளித்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.

குற்றம் கடிதல் கவுரவம்
திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கவனம், கவுரவம் இரண்டையும் குவித்து வருகிறது ‘குற்றம் கடிதல்' திரைப் படம். அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ள இந்த படம், நடந்து முடிந்த 12-வது சென்னை சர்வதேசப் பட விழாவில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. அதற்கு முன்பு இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வான ஒரே படம் என்ற கம்பீரத்தையும் பெற்றிருக்கிறது குற்றம் கடிதல்.

கதை என்ன
படத்தின் கதை பற்றி இயக்குநர் பிரம்மா கூறும்போது "மனிதர்கள் குற்றம் செய்வதில்லை, சூழ்நிலைதான் குற்றங்கள் நிகழக் காரணமாக அமைகின்றன. அப்படிப் பார்த்தால் யாருமே குற்றவாளிகள் கிடையாது. சிஸ்டம்தான் இங்கு தவறாக இருக்கிறது. அதைச் சொல்லும் கதை தான் குற்றம் கடிதல். பொழுதுபோக்குப் படம்தான் ஆனால், விழிப்புணர்வை பார்வையாளரே விரும்பாவிட்டாலும் அவரது மூளைக்குள் போட்டு அனுப்பிவிடும்.

த்ரில்லர்
விருதுக்கான படமென்றால் மிக மெதுவாக நகரும் என்ற கருத்தை குற்றம் கடிதல் உடைக்கும். கோவா மற்றும் சென்னை பட விழாக்களில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ‘இருக்கை நுனி த்ரில்லர்' என்று பாராட்டியிருக்கிறார்கள். வெவ்வேறு வாழ்க்கைத் தரத்தில் இருக்கும் 4 முக்கிய கதாபாத்தி ரங்கள் மத்தியில் நிகழும் ஒரு சம்பவத்தின் 24 மணிநேரச் சங்கிலித்தொடர் நிகழ்வுகள்தான் கதை" என்று படத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார் இயக்குநர் பிரம்மா.

ஹிந்தி மற்றும் மராத்தி
குற்றம் கடிதல் திரைப்படத்தை ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியிருக்கிறார். ஹிந்தி மொழியில் ஸ்ரத்தா கபூரை நடிக்க வைக்கவிருப்பதாகவும், மராத்தி மொழியில் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நாளை வெளியாவிருக்கும் குற்றம் கடிதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. குற்றம் கடிதல் மற்றொரு "காக்கா முட்டை"யாக மாற வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











