லட்சத்தீவுக்கு மத்திய அரசு கொரோனாவை பரப்பியதா? சர்ச்சை பேச்சால் இயக்குநர் மீது பாய்ந்தது வழக்கு
கொச்சி: லட்சத்தீவில் கொரோனாவை மத்திய அரசு பரப்பியதாக பிரபல பெண் இயக்குநர் சர்ச்சையாக பேசியது பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.
மலையாள இயக்குநர் ஆயிஷா சுல்தானா சமீபத்தில் டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட போது இப்படியொரு சர்ச்சையான கருத்தை முன் வைத்துள்ளார்.
இதன் காரணமாக அவர் மீது லட்சத்தீவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லட்சத்தீவை காப்பாற்றுங்கள்
லட்சத்தீவுக்கு மத்திய அரசு புதிய நெருக்கடி கொடுத்து வருவதாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என கேரள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். லட்சத்தீவில் மத்திய அரசு நில உரிமைகள் தொடர்பான விதிகளில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்களை அங்குள்ள மக்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர்.

பயோ வார்
லட்சத்தீவில் இருந்து இதுவரை கேரளாவுக்கு நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து, இனி கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு மாற்றப்பட போகிறது என்பததால் தான் கேரள பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்கிற கருத்தும் எழுந்துள்ளது. இந்நிலையில், லட்சத்தீவு மீது மத்திய அரசு பயோவார் நடத்தி உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை ஆயிஷா சுல்தானா கூறியிருப்பது பிரச்சனையை கிளப்பி உள்ளது.

லட்சத்தீவில் கொரோனா
லட்சத்தீவில் இதுவரை கொரோனா பரவல் இல்லாமல் இருந்ததாகவும் மத்திய அரசு தான் லட்சத்தீவில் கொரோனா பரவ காரணம் என்றும் மலையாள இயக்குநர் ஆயிஷா சுல்தானா சமீபத்தில் நடந்த டிவி விவாதம் ஒன்றில் பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லட்சத்தீவு போலீசார் ஆயிஷா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பாஜக புகார்
லட்சத்தீவை சேர்ந்த பாஜக தலைவர் அப்துல் காதர் இது தொடர்பாக கவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது 124A மற்றும் 153B உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். விரைவில் இதுதொடர்பாக ஆயிஷா சுல்தானாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications











