Lal Salaam: லால் சலாம் AI சர்ச்சை... ”பணம் கொடுத்தாச்சு..” முற்றுப்புள்ளி வைத்த AR ரஹ்மான்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான திமிறி எழுடா என்ற பாடல் AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை இந்தப் பாடலில் பயன்படுத்தியது சர்ச்சையானதை தொடர்ந்து, அதுகுறித்து ஏஆர் ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார்.
லால் சலாம் AI சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த், தான்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து லால் சலாம் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது லால் சலாம் படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது. அதில், "திமிறி எழுடா" என்ற பாடலில் ஏஆர் ரஹ்மான் AI டெக்னாலஜியை பயன்படுத்தியிருந்தார். எப்போதும் தனது இசையில் புதிய டெக்னாலஜிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஏஆர் ரஹ்மான், இந்தப் பாடலில் மறைந்த பாடகர்கள் இருவரின் குரல்களை பயன்படுத்தியிருந்தார்.
அதன்படி லால் சலாம் படத்தின் திமிறி எழுடா பாடலில், மறைந்த பின்னணிப் பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரை பாட வைத்தார். AI டெக்னாலஜியை பயன்படுத்தி உயிருடன் இல்லாத இரண்டு பாடகர்களையும் பாட வைத்தது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது. 1990களில் தனது மேஜிக்கல் வாய்ஸ் மூலம் ரசிகர்களை பரவசப்படுத்தியவர் சாகுல் ஹமீது. ஏஆர் ரஹ்மான் - சாகுல் ஹமீது கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன.
அதனால் லால் சலாம் படத்தின் 'திமிறி எழுடா' பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் மறைந்த பாடகர்களின் குரல்களை பயன்படுத்தியது எப்படி என சர்ச்சையும் வெடித்தது. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்ற ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கனவே AI மூலம் போலியான புகைப்படங்கள் வெளியாகி பலருக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அதேபோல் இதுவும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என சொல்லப்பட்டது.
இதனையடுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "லால் சலாம் படத்தில் 'திமிறி எழுடா' என்ற பாடலுக்காக AI மூலம் மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று அதற்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. முறையாக பயன்படுத்தினால் தொழில்நுட்பம் ஒருபோதும் அச்சுறுத்தலாகவோ தொல்லையாகவோ இருக்காது" என ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











