நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் மீது நில மோசடி வழக்கு

நடிகை ஸ்ரீபிரியாவின் கணவரும், நடிகை லதாவின் சகோதரருமான ராஜ்குமார் சேதுபதி மீது சென்னையை அடுத்த கோவளத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே படூர் கிராமத்தில் எனது தந்தை அர்ஜூனனுக்கு சொந்தமான 61 சென்ட் நிலம் உள்ளது.
1960ம் ஆண்டு வாங்கப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் வைக்க சென்றபோது சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் சேதுபதி என்பவர் எங்கள் இடத்தை ஆக்கிரமித்தது தெரிய வந்தது.
இது பற்றி பதிவு துறையில் விசாரித்தபோது எனது தந்தை- சகோதரர் இடத்தை எழுதிக் கொடுத்ததாக ராஜ்குமார் சேதுபதி போலி ஆவணம் தயாரித்ததும் தெரிய வந்தது. அவருடன் 6 பேர் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளனர்.
இதையடுத்து ராஜ்குமார் சேதுபதி மீது காஞ்சீபுரம் எஸ்.பியிடம் புகார் கொடுத்தோம். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்தி ராஜ்குமார் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி, மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications