நல்ல திரைப்படங்களுக்கு மொழி ஒரு பிரச்னையில்லை: இயக்குநர் சமுத்திரக்கனி
கம்பம்: நல்ல திரைப்படங்களுக்கு மொழி ஒரு பிரச்னையில்லை என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பான, திரை இயக்கத்தின் சார்பில், 4-ஆவது உலகத் திரைப்பட விழா கம்பம் அமராவதி திரையரங்கில் நடைபெற்றது.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, சீனமொழிப்படமான டச் ஆப் சின், மராத்தி மொழிப் படமான பன்றி, தென் ஆப்பிரிக்கா படமான மண்டேலா, போலந்து நாட்டின் இரண்டு படங்கள் உள்பட 5 படங்கள் திரையிடப்பட்டன.
இரண்டாவது நாள் நிகழ்ச்சிக்கு தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிகளை மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.கருணா, இயக்குநர் எம்.சிவக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திரை இயக்க உறுப்பினர் அய்.தமிழ்மணி, இயக்குநர் சமுத்திரக்கனிக்கு நினைவுப்பரிசு வழங்கினார். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, திரைக்கலைஞர் பூ ராமு, திரைப்பட வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர்கள் தேனி சீருடையான், ம.காமுத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளர்களுக்கு மரியாதை
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் சமுத்திரக்கனி, சமூகம் எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதையை சரியான விதத்தில் தரவில்லை என்ற ஆதங்கம் என்னிடம் உள்ளது என்றார்.

மொழி பிரச்சினையில்லை
சாதாரண மக்களுக்கு சர்வதேச திரைப்படங்களின் மொழி தெரியாது என்று பேசிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாலுமகேந்திராவின் வீடு தவிர பிடல் காஸ்ட்ரோ, மண்டேலா, பன்றி ஆகிய உலக மொழிப் படங்கள் திரையிடப்பட்டன.

ரசித்த கிராம மக்கள்
மொழியே தெரியாமல் கம்பத்தில் கிராமத்தினர் புரிந்துகொண்டு நல்ல வசனங்களுக்கு கைதட்டி ரசிக்கும்பொழுது, திரைப்படங்களுக்கு மொழி ஒரு பிரச்னையில்லை என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

ரசிகர்கள் மனதில் நிற்கும்
திரைப்படம் ஒரு கடல். இங்கே என்னைப்போன்றவர்கள் வரலாம், போகலாம். நல்ல திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் என்றார் சமுத்திரக்கனி.


Click it and Unblock the Notifications











