லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.. பாடகி வெளியிட்ட அறிவிப்பு!
மும்பை: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு மும்பை சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் பாடகி லதா மங்கேஷ்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ரேகா ஆகியோர் பங்களாக்களுக்கு மும்பை சுகாதார அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்திருந்தனர்.

இதன் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பரவியதாக வதந்திகள் வலம் வரத் தொடங்கின.
ஆனால், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்றும், முன்னெச்சரிக்கை காரணமாகத் தான் தங்களது பிரபுகஞ்ச் இல்லத்திற்கு மும்பை சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நாங்கள் அனைவரும் நலமாகவே உள்ளோம். வீண் வதந்திகளை யாரும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என 90 வயதை தாண்டிய லதா மங்கேஷ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்தே, தானும் தனது குடும்பமும் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடித்து வருகிறோம்.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கூட வீட்டிலேயே எளிமையான முறையில் தான் வழிபட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும், போனி கபூரின் பணியாளர்களுக்கும், அமீர்கான் வீட்டில் வேலை செய்யும் நபருக்கும் கொரோனா தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.
திடீரென ஏன் லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு மும்பை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்ற கேள்வியும் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி வருகிறது.


Click it and Unblock the Notifications











