எனக்கொரு மகன் இருந்திருந்தால் ஷாருக்கானை போலத்தான் இருந்திருப்பான்.. திலீப் குமார் மனைவி உருக்கம்!
மும்பை: மறைந்த நடிகர் திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானு தனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் ஷாருக்கான் போலவே இருந்திருப்பார் என உருக்கமாக நீண்டதொரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் தான் பாலிவுட் முழுக்க ஒரே பேச்சாக மாறி உள்ளது. பாலிவுட்டை தாண்டி இந்தியா முழுவதுமே ஷாருக்கான் திரைப்படம் பல முன்னணி நடிகர்களையும் இயக்குனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜவான் திரைப்படம் ஆறு நாட்களில் 600 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் ஷாருக்கானை வாழ்த்தும் நோக்கில் மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானு இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திலீப் குமாரின் மனைவி: பழம்பெரும் நடிகை நசிம் பானுவின் மகளான சாய்ரா பானு 1966 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் திலீப்குமார் காலமானார். அதுவரை தனது கணவரை பிரியாமல் வாழ்ந்து வந்தவர் சாய்ரா பானு.

ஆனால் திலீப் குமார் மற்றும் சாய்ரா பானுவிற்கு குழந்தைகள் ஏதும் இல்லை. நடிகர் ஷாருக் கான் பல ஆண்டுகளாக தங்கள் மகனைப் போலவே தங்களைப் பார்த்துக் கொள்வதாகவும் எப்போதுமே அன்பும் மரியாதையும் கொண்டவராகவே விளங்கினார் என அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
ஜவான் படத்தின் வெற்றி: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், பிரியாமணி, யோகி பாபு, அம்ரிதா ஐயர், சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஷாருக்கானின் புகழ் பாலிவுட் முழுக்க பரவி வரும் நிலையில், அவரை வாழ்த்தி சாய்ராபானு இந்த பதிவை போஸ்ட் செய்துள்ளார்.
ஷாருக்கானை வாழ்த்திய சாய்ரா பானு: அதில், எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இந்நேரம் ஷாருக்கான் போலவே சாதனை நாயகனாக மாறி இருப்பான். ஆனால், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்கிற கவலையே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக என்னுடைய மகன் போலவே ஷாருக்கான் இருந்து வந்தது நான் செய்த பாக்கியம். எனது கணவர் திலீப்குமார் திடீரென என்னை விட்டு பிரிந்து சென்ற நிலையில், உடனடியாக ஓடி வந்து இறுதிச் சடங்குக்கு தேவையான எல்லா வேலைகளையும் முதல் ஆளாக நின்று செய்தவர் ஷாருக் கான் அவர் இதேபோல இன்னும் பல வெற்றிகளை பெற்று சந்தோசமாக வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் என நடிகை சாய்ரா பானு பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











