Silk smitha Birthday: நேத்து ராத்திரி யம்மா..80ஸ் கனவு கன்னி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று!
சென்னை: நடிகை சில்க் ஸ்மிதாவின் 64வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசீகரமான அழகால் ரசிகர்களை வளைத்துப்போட்ட சில்க் ஸ்மிதா இவ்வுலகை விட்டு மறைந்து இருந்தாலும், இன்றளவும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
ஆந்திராவில் ஏலூரில் 1960ம் ஆண்ட பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி என்ற பெயரைக் கொண்ட இவர். வறுமை காரணமாக நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளை செய்து வந்தார். இதையடுத்து, சிறுவயதிலேயே பெற்றோர் இவருக்கு திருமணம் செய்துவைத்தனர். ஆனால், அந்த திருமண வாழ்க்கையும் சரியில்லாததால், பிழைப்பு தேடி சென்னை வந்த அவருக்கு, மேக்கப் கலைஞராக பணியாற்றும் வேலை கிடைத்தது. அப்போது, தான் அவர் வினுசக்கரவர்த்தியின் கண்ணில் பட்டார்.

விஜயலட்சுமி சில்க்காக மாறிய கதை: அதன் பின், வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க். வினுசக்கரவர்த்தி தான் அவருக்கு விஜயலட்சுமி என்ற பெயரை மாற்றி சில்க் என பெயர் வைத்தவர். அந்த நேரத்தில் அவர், இந்த பெயர் உலகமே கொண்டாடும் பெயராக மாறும் என்று தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், மோகன் என தமிழ் சினிமாவின் எந்த டாப் நடிகரின் படமாக இருந்தாலும், சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தார்கள். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்திலும் இதே நிலை தான்.
அழுத்தமான நடிப்பு: படமாவது, கதையாவது அதவிடுங்கப்பா, சில்க் ஸ்மிதா பாட்டு ஒன்னு இருந்தா போதும் படம் வெற்றி பெற்றுவிடும் என தயாரிப்பாளர்கள் நினைத்ததால், அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் சில்க்கின் ஆட்டம் நிச்சயம் இருக்கும். இதனால், சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்டுவிட்டார் சில்க். கவர்ச்சிக்கு மட்டுமல்ல குணசித்திர கதாபாத்திரத்திலும் புகுந்து விளையாடினார் திராவிட பேரழகி சில்க். பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் கவர்ச்சியை தாண்டி தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுத்தார்.
கண்ணீர் கதை : சினிமாவில் உச்சத்தில் இருந்த சில்க், தனிப்பட்ட வாழ்க்கையில் கண்ணீருடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்தார். காதல், ஏப்பேற்பட்டவரையும் முட்டாளாக்கிவிடும் என்பதற்கு, சில்க் சுமிதா மட்டும் என்ன விதிவிலக்கா?.அன்பை பார்த்து வராத காதல் அவர் உடல் மினுமினுப்பு மீதும், இவரின் பணத்தின் மீதும் வந்ததால் நொந்துபோன சில்க், ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டது தான் வேதனை. இன்று வரை அவரது மரணம் மர்மமாக உள்ளது.
இன்று பிறந்த நாள்: பொன்மேனி உருகுதே, அடி ஏய் மனம் நில்லுனா நிக்காதடி, நேத்து ராத்திரி யம்மா, ஆடி மாசம் காத்தடிக்க, பேசக்கூடாது இனி பேச்சில் சுகம், பூவே இளைய பூவே போன்ற பாடல்களில் தங்கத் தேர் போல மட்டு மேனியை காட்டி ஆட்டம் போட்ட கண்ணழகி சில்க்கிற்கு இன்றைய காலத்து இளசுகளும் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். இன்று சில்க் ஸ்மிதாவின் 64வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் ரசிகர்கள் அவரை நினைவு கூரும் வகையில் இணையத்தில் அவரின் போட்டோவை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











